மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி - பாடல் 5, 6

ஒளிநிறைந்த திருவடிகளை
Updated on
1 min read

வந்தாய்போலே வந்தும், என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய், இதுவே இதுஆகில்,
கொந்துஆர் காயாவின் கொழுமலர் திருநிறத்த
எந்தாய், யான் உனை எங்குவந்து அணுகிற்பனே?

கொத்தாக மலர்ந்த காயாம்பூவின் சிறந்த மலரைப் போன்ற திருநிறம் கொண்ட எங்கள் தந்தையே, பிரகலாதன், கஜேந்திரன் போன்றோருக்காக நேரில் வந்தவன் நீ, ஆனால் எனக்காக அவ்வாறு வந்து என் மனத்தைச் சிதறடிக்கச் செய்யவில்லை, இந்நிலையில் நான் உன்னை எங்கே வந்து அணுகுவேன்? (நாங்கள் உன்னைத் தேட ஏது வழி? நீயாக வந்து அருள்செய்தால்தானே உண்டு.)

•••

பாடல் - 6

கிற்பன், கில்லேன் என்றுஇலன் முனம்நாளால்,
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றுஒழிந்தேன்,
பல் பல் ஆயிரம் உயிர்செய்த பரமா, நின்
நல்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?

முன்பெல்லாம் நான் நல்ல விஷயங்களைச் செய்யவில்லை, தீயவற்றைச் செய்யாமல் தவிர்க்கவில்லை, அற்பமான சாரம்கொண்ட (சாரமே இல்லாத) விஷயங்களின் மீது ஆசைகொண்டு உன்னைவிட்டு அகன்றேன், பல ஆயிரம் உயிர்களைச் செய்த பரமனே, உன்னுடைய நல்ல, பொன்மயமான, ஒளிநிறைந்த திருவடிகளை நான் அடைவது எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com