மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி - பாடல் 9, 10, 11

எமனுடைய ஆட்கள் வந்து
Updated on
1 min read

கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழி திகைத்து அலமருகின்றேன்,
மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம்எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே?

பாவியாகிய நான் கொடிய வினைகளைத் தரும் இந்த உலக வாழ்க்கைப் புதரிலே நுழைந்துவிட்டேன், அதிலிருந்து வெளியே வரும் வழி தெரியாமல் நெடுங்காலமாகத் திகைத்து வருந்துகிறேன், அன்றைக்குப் பசுக்கூட்டங்களைக் காத்தவன், உலகையெல்லாம் தாவி அளந்தவன், அந்தப் பெருமானை நான் இனி எங்கே சென்று பெறுவேன்?

•••

பாடல் - 10

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல்ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே.

மனிதர்களுடைய கடைசிக் காலத்தில் எமனுடைய ஆட்கள் வந்து நிற்பார்கள், பாசக்கயிற்றை வீசுவார்கள், உயிர் அதிலே சிக்கி அலைக்கழிக்கப்படும்,
அத்தகைய துயரங்களையெல்லாம் எம்பெருமான் போக்கிவிட்டான், பலவகைக் கலைகள், ஞானங்களை அறிந்த என் கண்ணனைக் கண்டேன், அதனால் என் நெஞ்சம் நிலைபெற்றது, ஆன்மா நிலைத்தது.

•••

பாடல் - 11

உயிர்கள், எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊன்இடை ஒழிவிக்குமே.

எல்லா உயிர்கள், உலகங்களையும் தனக்கு உரிமையாகக்கொண்டவன் எம்பெருமான், குயில்கள் நிறைந்த சோலைகளைக்கொண்ட தென்குருகூர்ச் சடகோபன் அப்பெருமானைக் குற்றமற்ற சொற்களால் ஆயிரம் பாடல்களாகப் பாடினார், அந்த இசைமாலையில் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்களுடைய உயிருக்கும் உடலுக்கும் உள்ள சம்பந்தம் அறுந்துபோகும். (அவர்கள் பிறவாப் பெருவாழ்வு வாழ்வார்கள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com