மூன்றாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி -  பாடல் 3, 4

நறுமணத்தோடு மலர்ந்த மாலைகளை
Updated on
1 min read

மலையை எடுத்துக் கல்மாரி
காத்துப் பசுநிரைதன்னைத்
தொலைவுதவிர்த்த பிரானைச்
சொல்லிச்சொல்லிநின்று எப்போதும்
தலையொனொடு ஆதனம் தட்டத்
தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலைகொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.

கல்மழை பொழிந்தபோது, கோவர்த்தனகிரி என்னும் மலையை எடுத்துக் குடையாகப் பிடித்தான், அந்த மழையிலிருந்து பசுக்கூட்டங்களைக் காத்தான், அவற்றின் துன்பத்தை நீக்கினான் எம்பெருமான், அத்தகைய பெருமானின் பெருமைகளைப் பலமுறை சொல்ல வேண்டும், அவன்முன்னே நின்று வணங்க வேண்டும், தலையானது தரையில் படும்படி கீழ்மேலாக, மேல்கீழாக நடனமாட வேண்டும், இதையெல்லாம் செய்யாத வீணர்கள், துன்பம் நிறைந்த நரகத்திலே அழுந்திக் கிடந்து உழல்வார்கள்.

•••

பாடல் - 4

வம்புஅவிழ் கோதைபொருட்டா
மால்விடை ஏழும் அடர்த்த
செம்பவளத்திரள்வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகுஉகட்டு உண்டுஉழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்கள்இடையே?

நறுமணத்தோடு மலர்ந்த மாலைகளை அணிந்த நப்பின்னையை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்றவன், சிவந்த பவளம்போல் திரண்ட வாயைக்கொண்டவன், சிரீதரன் எம்பெருமான், அவனுடைய பழைமையான புகழைப் பாடி, வணங்கி, நடனமாட வேண்டும், தலைமண்டியிட்டு ஆட வேண்டும், இதையெல்லாம் செய்யாதவர்கள் சாதுக்களுக்கு நடுவே பிறந்து என்ன பயன்? (ஏதும் பயனில்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com