மூன்றாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி -  பாடல் 9, 10

சிவந்த கண்களைக்கொண்ட திருமாலை
Updated on
1 min read

அமரர் தொழப்படுவானை,
அனைத்து உலகுக்கும் பிரானை,
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன்தன்னோடு ஒன்றாக
அமரத் துணியவல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமம்மே.

அமரர்களாலே தொழப்படுகிறவன், எல்லா உலகங்களுக்கும் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை மனத்திலே நிறுத்தி யோகத்தைச் செய்து அவனோடு ஒன்றாக அமர்வதற்குத் துணியவல்லவர்கள் சிலர் உண்டு, அவர்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும், அப்பெருமானை நெஞ்சிலே நிறுத்தி, எழுந்து ஆடி அலற்றவேண்டும், அதுவே சிறந்த பணி.

•••

பாடல் - 10

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன்தன்னை,
திருமணிவண்ணனை, செம்கண்
மாலினை, தேவபிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.

செயல்கள், அவற்றுக்கான பலன்கள் என அனைத்துமாக உள்ளவன், எல்லாவற்றுக்கும் காரணமாகத் திகழ்கிறவன், எம்பெருமான், அந்தத் திருமணிவண்ணனை, சிவந்த கண்களைக்கொண்ட திருமாலை, தேவபிரானை மனத்திலே குவியுங்கள், உள்ளம் குழைந்து எழுந்து ஆடுங்கள், அதனால் உங்களுடைய பெருமையும் நாணமும் தீரட்டும், அறிவின்மை போகட்டும், அவனுடைய பெருமைகளைச் சொல்லிப் பலவிதமாகப் பிதற்றுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com