

பாடல் - 5
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
அடிசில் உண்டதும்
வண்ண மால்வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத்து, உண்டு, உமிழ்ந்து,
கிடந்து, இடந்து, மணந்த மாயங்கள்
எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு
ஒக்கும் நின்றே.
எம்பெருமானே, தேவர்கள் தலைவனான இந்திரனுக்காக ஆயர்கள் உணவைச் செய்துவைத்தார்கள். அதை நீ உண்டாய், அதனால் மழை பெரிதாகப் பொழிய, அழகிய மலையை எடுத்து மழையிலிருந்து மக்களைக் காத்தாய். முன்பு நீ பூமியைப் படைத்தாய், (பிரளயத்தின்போது) உண்டாய், உமிழ்ந்தாய், (வாமனனாக) அளந்தாய், (வராகமாக) இடந்தாய், (பூமாதேவியை) மணந்தாய், இந்த மாயங்களையெல்லாம் எண்ணும்போது, என் நெஞ்சம் நெருப்பில் பட்ட மெழுகைப்போல் தவிக்கிறது.
***
பாடல் - 6
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்
நினைப்பு அரியன
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன், உனை எங்ஙனம்
நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய், உலகம் உண்ட ஒண்சுடரே.
எம்பெருமானே, நீ நின்ற தன்மையும், இருந்த தன்மையும், கிடந்த தன்மையும் என்னால் நினைக்க அரியவை, நீயோ ஓர் உருவமாக அன்றிப் பல உருவங்களாகவும் அருவமாகவும் திகழ்கிறவன், உன்னுடைய மாயங்களை நான் நினைக்கிறேன், எனினும், உன்னை முழுமையாக என்னால் அறிய இயலுமா? (இயலாது.) உலகை உண்ட ஒளிநிறைந்த சுடரே, பாவியாகிய எனக்கு ஒரு வழிகாட்டுவாய், அருள்செய்வாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.