

பாடல் - 7
ஒண்சுடரோடு இருளுமாய் நின்றவாறும், உண்மையோடு
இன்மையாய் வந்து என்
கண்கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண்கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
மாணிக்கமே, என் கண்கட்குத்
திண்கொள ஒருநாள் அருளாய் உன் திரு உருவே.
எம்பெருமானே, நீயே ஒளிநிறைந்த சுடராகவும் இருளாகவும் நிற்கிறாய், உண்மையாகவும் இன்மையாகவும் இருக்கிறாய், இவ்வாறு நீ என்னுடைய கண்ணுக்குப் புலப்படாமல் வந்து, மறைந்துநின்று ஏதேதோ செய்கிறாய், அவற்றையெல்லாம் சிந்தையிலே எண்ணி நைந்துபோகின்றேன், என்னுடைய கரிய மாணிக்கமே, ஒருநாள் நான் என் கண்களால் காணும்படி உன்னுடைய திருவுருவைக் காண்பிக்கவேண்டும்.
***
பாடல் - 8
திரு உருவு கிடந்தவாறும், கொப்பூழ்ச் செந்தாமரைமேல்
திசைமுகன்
கரு உள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும்
என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவிசோரும் கண்ணீர், என்செய்கேன் அடியேனே.
எம்பெருமானே, உன்னுடைய திருவுருவம் கிடந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்செய்த தன்மையையும், உனது தொப்புளிலிருந்து எழுந்த செந்தாமரைமேலே தோன்றிய பிரம்மனுக்குள்ளிருந்து நீ இவ்வுலகைப் படைத்த தன்மையையும், இணையற்ற உன்னுடைய தனித்துவமான தலைமைக்குணத்தையும் கேட்கும்போதெல்லாம், என் நெஞ்சம் நெகிழ்கிறது, கண்களில் அருவிபோல் நீர் கொட்டுகிறது, அடியேன் என்னசெய்வேன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.