ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

அவனையே எண்ணிக்கிடக்கும்
ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read

பாடல் - 5

கடியன் கொடியன் நெடிய மால், உலகம் கொண்ட
அடியன், அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே,
துடிகொள் இடை மடத்தோழி, அன்னை என் செய்யுமே!

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.)  நெடிய மால், உலகை அளந்துகொண்ட திருவடிகளைக் கொண்டவன், அறிய அரிய திருமேனிகொண்ட மாயன், எம்பெருமான், அவன் கடுமையானவனாக இருந்தாலும் சரி, கொடுமை செய்தாலும் சரி, என்னுடைய கொடிய நெஞ்சம் அவனையே எண்ணிக்கிடக்கும், உடுக்கை போன்ற இடையைக்கொண்ட, மடப்பம் எனும் குணத்தைக்கொண்ட என் தோழி, (நான் அவனை எண்ணுவது என் அன்னைக்குப் பிடிக்காவிட்டால்தான் என்ன?) அன்னையின் சொற்கள் என்னை என்ன செய்துவிடும்?

******

பாடல்  - 6

அன்னை என்செய்யில் என்? ஊர் என்சொல்லில் என்?
                                                                                               தோழிமீர்,
என்னை இனி உமக்கு ஆசை இல்லை, அகப்பட்டேன்,
முன்னை அமரர் முதல்வன், வண்துவராபதி
மன்னன், மணிவண்ணன், வாசுதேவன் வலையுளே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) தோழிகளே, என்றென்றும் அமரர்களின் தலைவனான எம்பெருமான், வண்மை நிறைந்த துவாரகையின் மன்னன், மணிவண்ணன், வாசுதேவனின் வலையில் நான் அகப்பட்டேன், இனி, அன்னை என்னை என்ன செய்தால் என்ன? ஊர் என்னை என்ன சொன்னால் என்ன? என் மீது உங்களுக்கு இனி எந்த ஆசையும் வேண்டாம். (நான் அவனுக்குரியவள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com