

பாடல் 3
அருள்தான் இனி யான் அறியேன், அவன் என்னுள்
இருள்தான் அற வீற்றிருந்தான், இது அல்லால்
பொருள்தான் எனின் மூ உலகும் பொருள் அல்ல,
மருள்தான் ஈதோ, மாய மயக்கு மயக்கே.
எம்பெருமான் எனக்குள் வீற்றிருக்கிறான், என்னுடைய அகத்து இருள் போகும்படி செய்கிறான், இதைக்காட்டிலும் மூவுலகங்களையும் அவன் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பக்தன்மீது பெருமானுக்கு இப்படியோர் அன்பா? இது நிஜமா? வெறும் மருள்காட்சியா? பெரும் மாய மயக்காக உள்ளதே.எம்பெருமானின் இத்தகைய அருளைத்தவிர வேறு எதையும் நான் அறியேன்.
பாடல் 4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து,
ஆயன், அமரர்க்கு அரி ஏறு, எனது அம்மான்,
தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்
தேயம் திகழும் தன் திருவருள் செய்தே.
ஆயன், அமரர்களுக்குத் தலைவனான உயர்ந்த ஆண் சிங்கம், என்னுடைய அம்மான், ஒளிமயமான தன் திருவருளாலே, தன்னுடைய தூய சுடர்ச்சோதியை எனக்குள் வைத்தான், அவன் என்னை ஒருபோதும் வஞ்சிப்பதோ, மயக்குவதோ இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.