

பாடல் - 7
மற்று ஒன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா, சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ,
குற்றம் அன்று, எங்கள் பெற்றத்து ஆயன், வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர், குணமே.
இந்தப் பெரிய நிலத்தில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் இதைச் சுருக்கமாகச் சொல்கிறோம், கேளுங்கள், அடடா, உய்வை நாடி நீங்கள் வேறு எங்கும் சென்று திரியவேண்டாம், சிதறவேண்டாம், எம்பெருமானைச் சிந்தியுங்கள், நலம் பெருகுவதைக் காண்பீர்கள். பசுக்களை மேய்த்த எங்கள் ஆயன், வடமதுரையிலே பிறந்த கண்ணன், அவருடைய குற்றமில்லாத சிறப்புகளைக் கற்றுக்கொண்டு தினந்தோறும் அவரை எண்ணியபடி வாழுங்கள், இது குற்றமில்லை, இதுவே குணம், வேறு வழி நமக்கில்லை.
பாடல் - 8
வாழ்தல் கண்டீர் குணம் இது, அந்தோ, மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம், இதனில் யாதும் இல்லை மிக்கதே.
மாயவனின் திருவடிகளைப் போற்றிப் பாடுவதிலேயே ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறந்தவர்கள், அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவனாக வடமதுரையிலே பிறந்த எம்பெருமான், அவனுடைய வளம் நிறைந்த புகழே அவர்கள் விரும்பும் துணையாகும், இப்படி வாழ்வதே நல்ல குணம், இதைவிடச் சிறந்தது ஏதுமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.