

பாடல் 6
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
ஆழிஅம் கண்ணா, உன் கோலப்பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
பலர், அது நிற்க, எம் பெண்மை ஆற்றோம்,
வடித் தடம் கண் இணை நீரும் நில்லா,
மனமும் நில்லா, எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு,
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே.
கடலைப்போன்ற அழகிய கண்களையுடையவனே, அடியவர்களாகிய எங்களுடைய தலையிலே உன்னுடைய திருக்கரத்தை அணிவிப்பாய், நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்லும்போது உன்னுடைய அழகிய திருப்பாதங்களைப் பிடித்துவிடுவதற்குப் பல பெண்கள் இருக்கிறார்கள். அதேசமயம், உன்னைப் பிரிவதைத் தாங்கமுடியாமல் எங்கள் பெண்மை தவிக்கிறது, கூர்மையான, பெரிய கண்களிலிருந்து நிற்காமல் நீர் வழிகிறது, எங்கள் மனமும் எங்களிடம் நிற்பதில்லை, ஆகவே, நீ பசுக்கூட்டங்களை மேய்க்கப்போவதை எங்களால் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை, எங்களுடைய உயிர் நெருப்பில் சிக்கிய மெழுகைப்போல உருகி வேகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.