ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

அன்னைமார்களே
ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8
Updated on
1 min read


பாடல் - 7

காண்மின்கள் அன்னையர்காள் என்று
                                    காட்டும் வகை அறியேன்,
நாள் மன்னு வெண் திங்கள்கொல், நயந்தார்கட்கு
                                   நச்சு இலைகொல்,
சேண் மன்னு நால் தடம்தோள் பெருமான்
                                   தன் திருநுதலே
கோள் மன்னி ஆவி அடும், கொடியேன் உயிர்
                                   கோள் இழைத்தே.

நீண்ட, பெரிய நான்கு திருத்தோள்களைக்கொண்ட எம்பெருமானின் திருநெற்றி, வளர்பிறை எட்டாம் நாள் சந்திரனோ? விரும்பியவர்களுக்கு நஞ்சாகும் ஓர் இலையோ? அந்த நெற்றியின் அழகு, கொடியவளாகிய என் உயிரைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் என்னை வருத்துகின்றது. அன்னைமார்களே, ‘இதோ பாருங்கள்’ என்று நான் எப்படி இதை உங்களுக்குக் காண்பிப்பேன்? எனக்குத் தெரியவில்லையே.

***

பாடல் - 8

கோள் இழைத் தாமரையும் கொடியும்
                                  பவளமும் வில்லும்
கோள் இழைத் தண் முத்தமும் தளிரும்
                                 குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும்சோதி
                                 வட்டம்கொல், கண்ணன்
கோள் இழை வாள்முகமாய்க் கொடியேன்
                                  உயிர் கொள்கின்றதே.

தன் அழகையே தனக்கு அணிகலனாகக் கொண்ட தாமரை (திருக்கண்கள்), கொடி (திருமூக்கு), பவளம் (திரு உதடுகள்), வில் (திருப்புருவம்), குளிர்ந்த முத்துகள் (திருப்பற்கள்), தளிர் (திருச்செவிகள்), குளிர்ந்த, பெரிய, பிறை (திருநெற்றி) ஆகியவற்றைக் கொண்ட, தன் அழகையே தனக்கு அணிகலனாகக் கொண்ட முழுமையான சோதி மண்டலம்தான் எம்பெருமானின் திருமுகமோ? கொடியவளாகிய என்னுடைய உயிரை அது கொண்டுபோகின்றதே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com