ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

ருக்மிணியின் அழகிய
ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read


பாடல் - 5

மலர் அடிப் போதுகள் என் நெஞ்சத்து
எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலர் அடியார்முன்பு அருளிய
பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடுமாடங்கள்
நீடு மதிள் திருவாறன்விளை
உலக மலி புகழ் பாட நம்மேல்
வினை ஒன்றும் நில்லா கெடுமே.

எம்பெருமான் தன்னுடைய மலர்த் திருவடிகள் எப்போதும் என் நெஞ்சில் இருக்கும்படி செய்தார், எந்நேரமும் அவரை வணங்கச்செய்தார், பல அடியவர்களுக்குமுன்பாக எனக்கு அருளினார், பாம்பைப் படுக்கையாகக் கொண்ட அப்பெருமான், நம் அப்பன் அமர்ந்து உறைகிற திருத்தலம், மலர்களும் மணிகளும் சேர்ந்த நீண்ட மாடங்களைக் கொண்ட, நீண்ட மதிள்சுவரைக் கொண்ட திருவாறன்விளை, அத்திருத்தலத்தின் புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறது, அதை நாமும் பாடுவோம், அப்போது நம்முடைய வினைகள் ஒன்றும் நம்மிடம் தங்காமல் கெட்டுவிடும்.

***

பாடல் - 6

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை,
உள்ளித் தொழுமின் தொண்டீர்,
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி
நங்கை அணி நெடும்தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம்
துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை
என்னும் நீள் நகரம் அதுவே.

அன்றைக்கு அங்கே போரிலே வென்று ருக்மிணியின் அழகிய, நீண்ட தோள்களை அணைத்தவன், நான் துதிக்கும்படி என்றைக்கும், எப்போதும் என் நெஞ்சுக்குள் இருக்கின்ற பெருமான், அவர் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், திருவாறன்விளை என்கிற பெரிய நகரம். தொண்டர்களே, அந்தத் திருவாறன்விளையை எண்ணித் தொழுங்கள், எம்பெருமானை வணங்குங்கள், உங்களுடைய தீவினைகள் ஒன்றும் நிற்காமல் முழுமையாகக் கெடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com