ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

கொடுத்துத் தீர்த்தபிறகு
ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read


பாடல் - 9

தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவாகித்
தெளிவிசும்பு ஏறல் உற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்
அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும்
பொழில் திருவாறன்விளை அதனை
மேவி வலம்செய்து கைதொழக்
கூடும்கொல் என்னும் என் சிந்தனையே.

தீவினைகள் உள்ளத்திலே சேராமல் தெளிவான பரமபதத்தை அடையநேர்ந்தாலும், அதைக்காட்டிலும் திருவாறன்விளைக்குச் சென்று எம்பெருமானை வணங்குவதையே நான் விரும்புவேன். நாவாலும் மனத்தாலும் செயலாலும் பெரியோர்கள் எல்லாரும் வந்து வணங்குகிற திருத்தலம், பொழில்களைக்கொண்ட திருவாறன்விளை. அங்கே சென்று, அத்திருத்தலத்தை வலம் வந்து கைதொழக்கூடுமோ என்றே நான் எப்போதும் சிந்திப்பேன்.

***

பாடல் - 10

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை
தேவபிரான் அறியும்,
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
மாயங்கள் ஒன்றும் இல்லை,
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்
நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
தீர்த்தனுக்கு அற்றபின்னே.

நிலத்திலே வாழும் தேவர்களான வைணவர்கள், தங்களுடைய சிந்தனை, சொல், செய்கை என அனைத்தாலும் எம்பெருமானை வணங்குகிறார்கள், அவர்களுடைய சிந்தனையை மகிழ்விக்கும் அப்பெருமான் திருவாறன்விளையிலே உறைகிறார். அவருக்கு என்னைக் கொடுத்துத் தீர்த்தபிறகு, என்னுடைய சிந்தனை வேறு எதன்மீதும் செல்லாது, இதனை அந்தத் தேவபிரான் அறிவார். அவர் அறியாத மாயங்கள் உண்டோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com