எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2

என்னை வாட்டுகின்றன
எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2
Updated on
1 min read


பாடல் - 1

தேவிமார் ஆவார் திருமகள், பூமி, ஏவ மற்று
                                      அமரர் ஆட்செய்வார்,
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி, வேண்டு
                                     வேண்டு உருவம் நின் உருவம்,
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணது
                                     ஓர் பவளவாய் மணியே,
ஆவியே, அமுதே, அலைகடல் கடைந்த அப்பனே,
                                      காணுமாறு அருளாய்.

பெருமானே, உன்னுடைய தேவிமார்கள், திருமகளும் புவிமகளும், உன்னுடைய கட்டளைகளை ஏற்றுப் பணிபுரிகிறவர்கள், அமரர்கள், நீ ஆள்வது, சிறந்த மூன்று உலகங்களை. உன்னுடைய திருவுருவங்கள், அன்பர்கள் வேண்டுகின்ற அனைத்து உருவங்களும். உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்களும் பவளம்போன்ற திருவாயும் பாவியாகிய என்னை வாட்டுகின்றன, மணிபோன்றவனே, என் ஆவியே, அமுதே, அலைகடலைக் கடைந்த அப்பனே, நான் உன்னைக் காண வழிசெய்வாய்.

***

பாடல் - 2

காணும் ஆறு அருளாய் என்று என்றே
        கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன்
பேணும் ஆறு எல்லாம் பேணி நின் பெயரே
       பிதற்றுமாறு அருள் எனக்கு, அந்தோ,
காணுமாறு அருளாய் காகுத்தா, கண்ணா,
       தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே, பெரிய தண் புனல் சூழ்
       பெருநிலம் எடுத்த பேராளா.

எம்பெருமானே, உன்னைக் காணுகின்ற வழியை எனக்கு அருளிச்செய்வாய் என்றே நான் எண்ணிக் கலங்குகிறேன், தீவினை புரிந்தவனாகிய நான், கண்களில் நீர் வழிய நிற்கிறேன், உனக்கு எதையெல்லாம் செய்யவேண்டும் என்று கருதினேனோ, அதையெல்லாம் செய்து வணங்குகிறேன், உன் பெயரையே சொல்லிப் பிதற்றுகிறேன், பெருமானே, நீ எனக்குத் தந்த அருள் இதுதானோ? அடடா. காகுத்தா, கண்ணா, தொண்டனாகிய என்னுடைய கற்பகக் கனியே, விரும்புகிறவர்களுடைய அமுதே, பெரிய, குளிர்ந்த நீரால் சூழப்பட்ட பூமியை எடுத்த பேராளனே, உன்னைக் காண அருள்செய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com