ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

இன்னொன்றைச் சூழ்வார்களா?
ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read


பாடல் - 5

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும்புனல்தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப்படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.

ஆழமான பிரளய வெள்ளத்திலே பூமி அழுந்தியது. அப்போது எம்பெருமான் சிறிதும் காலம் தாழ்த்தாமல் வராக அவதாரமெடுத்தான், தன்னுடைய ஒப்பற்ற கொம்பிலே பூமியைக் குத்திக் கொண்டுவந்து காப்பாற்றினான். இந்த வராகத் திருவுருவத்தின் தன்மைகளைக் கேட்டு, உணர்ந்து, சிந்தித்தவர்கள், அந்த மாயனின் திருவடிகளையன்றி இன்னொன்றைச் சூழ்வார்களா? (மாட்டார்கள். அவன் திருவடிகளையே சூழ்வார்கள்.)

***

பாடல் - 6

கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டம்இலா வண் கை மாவலி வாதிக்க, வாதிப்புண்டு
ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டம் கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.

பிறருக்கு அள்ளித்தருவதிலே குறை வைக்காத கைகளைக்கொண்டவன் மாவலி, அத்தகைய வள்ளல்தன்மையைக் கொண்ட அவன், தேவர் கூட்டத்தைத் துன்புறுத்தினான், அவர்கள் அதனால் மிகவும் வருந்தி எம்பெருமானிடம் சென்று உதவி கேட்டார்கள், அவர்களுடைய இடரை நீக்குவதற்காக, வளைந்த கைகளையுடைய வாமனனாக அவதரித்தான் எம்பெருமான். அவ்வாறு எம்பெருமான் வாமனனாகச் செய்த திருச்செயல்களைக் கண்டு, கேட்டு, உணர்ந்தவர்கள் அந்தக் கேசவனுக்கு ஆட்படாமலிருப்பார்களா? (மாட்டார்கள். நிச்சயம் அவனுக்கே ஆட்படுவார்கள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com