ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

தாமரைத் திருவடிகளை
ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2
Updated on
1 min read


பாடல் - 1

பா மரு மூ உலகும் படைத்த பற்பநாபாவோ,
பா மரு மூ உலகும் அளந்த பற்பபாதாவோ,
தாமரைக் கண்ணாவோ, தனியேன் தனி ஆளாவோ,
தாமரைக் கையாவோ, உன்னை என்றுகொல் சேர்வதுவே.

பரப்பையுடைய மூன்று உலகங்களையும் படைத்த பற்பநாபனே, பரப்பையுடைய மூன்று உலகங்களையும் அளந்த தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, தாமரை போன்ற திருக்கண்களைக் கொண்டவனே, தனித்திருக்கும் என்னைத் தனியே ஆள்பவனே, தாமரை போன்ற திருக்கைகளைக் கொண்டவனே, நான் உன்னை என்றைக்குச் சேர்வேன்!

***

பாடல் - 2

என்றுகொல் சேர்வது, அந்தோ, அரன், நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம், நீர், எரி, கால், விண், உயிர்
என்ற இவைதாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ,
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ.

எம்பெருமானே, நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், உயிர் தொடங்கி அனைத்துமாக நின்ற எங்கள் தந்தையே, ஆநிரைகளை மேய்த்தவனே, பெருமழை வந்தபோது கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து அவற்றைக் காத்தவனே, எங்கள் கூத்தனே, சிவனும் பிரம்மனும் போற்றுகிற செம்மையான உன்னுடைய திருப்பாதத்தை நான் என்றைக்குச் சேர்வேன்? அடடா!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com