

பாடல் - 7
வருவார், செல்வார், வண் பரிசாரத்து இருந்த என்
திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்,
உருஆர் சக்கரம், சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே?
மக்கள் பலர் திருவண்பரிசாரத்துக்குச் செல்கிறார்கள், வருகிறார்கள், ஆனால், அவர்களில் ஒருவர்கூட, அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் என்னைப்பற்றிச் சொல்வதில்லையே, திருமகள் வாழும் மார்பைக்கொண்ட அப்பெருமானிடம், ‘அழகிய சக்ராயுதம், சங்கைச் சுமந்துகொண்டு நீங்கள் உலகைக் காக்கச் செல்லும்போது, உங்களோடு வந்து பணிவிடை செய்யக்கூடிய ஓர் அடியவன் இருக்கிறான்’ என்று யாரேனும் என்னைப்பற்றிச் சொல்லமாட்டார்களா? நான் என்ன செய்வேன்?
பாடல் - 8
என்றே என்னை உன் ஏர் ஆர் கோலம் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பதுதான்,
குன்று ஏழ், பார் ஏழ், சூழ்கடல், ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே.
ஏழு மலைகள், ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு உலகங்கள் ஆகிய அனைத்தையும் நின்றபடியே தாவி அளந்த பெருமானே, நீண்ட திருவடிகளையுடைய, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலே, உன்னுடைய அழகிய திருவடியின்கீழ் என்னை ஏற்றுக்கொண்டு, உனக்கு அடிமை செய்யுமாறு எனக்கு நீ அருள்வது எந்நாளோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.