

பாடல் - 5
கோயில்கொண்டான் தன் திருக்கடித்தானத்தைக்
கோயில்கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்,
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில்கொண்ட குடக்கூத்த அம்மானே.
கோயில்களிலே உள்ள தெய்வங்கள் எல்லாம் தொழுகின்ற பெருமான், வைகுந்தத்தைத் தன்னுடைய கோயிலாகக் கொண்டவன், குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தன்னுடைய கோயிலாகக் கொண்டான், அத்துடன், என் நெஞ்சத்தையும் தன்னுடைய கோயிலாகக் கொண்டான்.
பாடல் - 6
கூத்த அம்மான், கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான், மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா, குறிக்கொள்மின், இடரே.
சிறந்த செயல்களைப் புரிகிற அம்மான், கொடியவனான என்னுடைய துன்பத்தை முழுவதுமாக அழித்த அம்மான், மதுசூதன அம்மான் உறைகின்ற திருத்தலம், பொழில்களில் மலர்கள் பூத்த, குளிர்ச்சியான திருக்கடித்தானம், அந்தத் திருத்தலத்தைப் போற்றுங்கள், துன்பங்கள் நிற்காமல் ஓடிவிடும், இதை மனத்தில் வையுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.