

பாடல் - 7
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே,
இமையவர்தமக்கும் ஆங்கு அனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை அடியர் கவ்வை கண்டு உகந்து
நாம் களித்து உளம் நலம் கூர
இம் மட உலகர் காண நீ ஒருநாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே.
எங்கள் துன்பங்களை நீக்கி இங்கே என்னை ஆள்பவனே, இமையாத வானவர்களுடைய துன்பங்களையும் போக்கி ஆள்பவனே, சிவந்த மடல்களுடன் தாமரைகள் மலர்கிற வயல்களைக்கொண்ட குளிர்ந்த திருப்புளிங்குடியிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்பவனே, உன்னுடைய அடியவர்கள் மகிழ்ந்து ஆரவாரிக்க, அந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்து நாங்கள் களிக்கிறோம், மனத்தில் ஆனந்தம் பெருகுகிறது, எனினும், இந்த உலகத்தில் சிலர் அஞ்ஞானத்துடன் இருக்கிறார்கள்; அவர்கள் காணும்படி நீ ஒருநாள் இங்கே வரவேண்டும், எங்கள் கண்முன்னே நிற்கவேண்டும்.
பாடல் - 8
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
இணை அடி தொழுது எழுது இறைஞ்சித்
தங்கள் அன்பு ஆரத் தமது சொல்வலத்தால்
தலைத்தலைச் சிறந்து பூசிப்பத்
திங்கள்சேர் மாடம் திருப்புளிங்குடியாய்,
திருவைகுந்தத்து உள்ளாய், தேவா,
இங்கண் மா ஞாலத்து இதன் உளும் ஒருநாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே.
உலகத்தவர்கள் எல்லாரும் எங்கள் கண்முன்னே உன்னுடைய திருவடிகளைத் தொழுகிறார்கள், எழுகிறார்கள், இறைஞ்சுகிறார்கள், தங்களுடைய உள்ளத்திலிருந்து அன்பு பெருக, தங்களால் இயன்ற சொற்களைச் சொல்லி ஒவ்வொருவரும் உன்னைச் சிறப்பாகப் பூசிக்கிறார்கள், சந்திரன் சேரும் மாடங்களைக்கொண்ட திருப்புளிங்குடியிலே கிடந்த திருக்கோலத்தில் அருளும் பெருமானே, திருவைகுந்தத்திலே நின்ற திருக்கோலத்தில் அருளும் பெருமானே, தேவா, இந்த அகன்ற, பெரிய உலகத்திற்கும் ஒருநாள் வருவாய், இதனை இடமாக ஏற்றுக்கொண்டு, வீற்றிருந்து அருள்வாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.