ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2

வீற்றிருக்கும் திருமகள்
ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2
Updated on
1 min read

பாடல் - 1

மை ஆர் கரும் கண்ணி, கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே,
வெய் ஆர் சுடர் ஆழி, சுரிசங்கம் ஏந்தும்
கையா, உனைக் காணக் கருதும் என் கண்ணே.

மையிட்ட கரிய கண்களையுடையவள், தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள் உன்னுடைய திருமார்பிலே தங்குகிறாள், அத்தகைய திருமாலே, வெப்பமான கதிர்கள் நிறைந்த சக்ராயுதத்தையும், சுழிந்த சங்கையும் கையில் ஏந்தியவனே, என் கண்கள் உன்னைக் காண விரும்புகின்றன.

பாடல் - 2

கண்ணே, உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்,
விண்ணோர், முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே.

என் கண் போன்றவனே, உன்னைக் காண விரும்பி என்னுடைய நெஞ்சம் ஏங்குகிறது, பலவிதமாக எண்ணிப் பேசுகிறது, விண்ணோர், முனிவர்களால்கூட எளிதில் காண இயலாத அரியவனே, உன்னைச் சேராமல் விடமாட்டேன் என்று நான் திரும்பத் திரும்ப அழைக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com