

பாடல் 10
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான்,
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று,
பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.
அன்றைக்கு நரசிம்மனாக வந்து இரணியனின் உடலைக் கிழித்த பெருமான், என்னுடைய பிறவித்துயரத்தை அறுத்து, பற்றுகளை விலக்கி என்னைத் தன் அடிமையாக்கிக்கொண்டான், அவனைப் பிரியாமல் தொண்டுசெய்யும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்தான். பெரியவர்களுக்கு ஆட்பட்டுத் தொண்டுசெய்கிறவர்கள், யாரும் பெறாத பயன்களைப் பெறுவார்கள். வரிகளையுடைய ஒளிபொருந்திய வாயைக்கொண்ட பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான், திருவாட்டாற்றுப் பெருமான் இந்த வழியை எனக்குக் காட்டினான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.