ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (முதல் பாகம்), உரையாசிரியர் - கரு. முத்தய்யா; பக். 464, ரூ. 400, கலாúக்ஷத்திரா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 33; 9840358301 .
சிலப்பதிகாரம், மணிமேகலையை வெளியிட்ட கோவிலூர் மடம், சீவக சிந்தாமணியை 3 பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு முதல் பாகத்தை வெளியிட்டுள்ளது.
13 இலம்பகங்களில் 3145 பாடல்களைக் கொண்ட சிந்தாமணியில் முதல் மூன்று இலம்பகங்களிலுள்ள 850 பாடல்களுக்கு மூலத்துடன் உரையும் தரப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் உ.வே.சா. பதிப்பித்த சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ஜெ.ஸ்ரீ. சந்திரன் எழுதிய சீவக சிந்தாமணி உரை ஆகியவற்றை ஒப்புநோக்கி, எளிமைப்படுத்தப்பட்ட உரையைத் தந்துள்ளார் ஆசிரியர். பாடல், பொருள் ஆகியவற்றுடன் தேவைப்படுகிற இடங்களில் விளக்கமும் அருஞ்சொற்பொருள்களும் தரப்பட்டுள்ளன.
விசயைக்குச் சீவகன் பிறக்கும் காட்சிகளை விவரிக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த திரைப்படக் காட்சிகளைப் போல நிகழ்வுகளை விளக்கிச் செல்கின்றன. குறிப்பாக, மயானம் பற்றிய வர்ணனை. அரண்மனையில் இருந்திருந்தால் கணவன் சச்சந்தன் எப்படியெல்லாம் இதைக் கொண்டாடியிருப்பான் என்பதை விசயையின் எண்ணங்களிலேயே காட்டுகிறார் திருத்தக்க தேவர்.
ஒவ்வொரு பாடலிலும் அவள் அழகை விவரித்துக்கொண்டே சென்று நிறைவாகத்தான் விசயையின் பெயரையே அறிமுகப்படுத்துகிறார். முன்னிகழ்ந்தவற்றைப் பாடல்களில் காட்சிகளாக்கும்போது பாடல்களை எவ்வாறு இணைத்துப் பொருள்கொள்ள வேண்டும் என்பது பற்றியதான விளக்கங்களையும் தேவைப்படும் இடங்களில் தருகிறார் உரையாசிரியர் கரு. முத்தய்யா.
மூன்று பாகங்களையும் சேர்ந்தாற்போலப் படிக்கும்போதுதான் முழுமையாகக் காவியத்தின் சிறப்பையும் அழகையும் மிகுந்துணர வாய்ப்பாக இருக்கும். இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.