நாட்டுப்புறவியலும் நானும் (தமிழ்நாட்டுப்புறவியல் வரலாறு) - பேரா. சு.சண்முகசுந்தரம்; பக்.570; ரூ.600; காவ்யா, சென்னை- 24; ✆ 044- 2372 6882.
'நாட்டுப்புறவியல்' ஓர் அறிமுகம், நூலை 1975-ஆம் ஆண்டில் எழுதிய நூலாசிரியர் - நாட்டுப்புறப் பாடல்கள், ஆடல்கள், கதைகள், கூத்துகள், தேவதைகள், பழமொழிகள், விடுகதைகள், காதல் பாடல்கள் உள்ளிட்ட பத்து தலைப்புகளில் அதில் இட்டிருக்கிறார். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய டாக்டர் ந.சஞ்சீவி, 'இந்த நூல், இத்துறையைக் கற்க விரும்புவோருக்கு சிறந்த அறிமுகம்' என்கிறார்.
நூலாசிரியர் பதிப்பித்த முதல் கதைப் பாடல் 'ஈனமுத்துபாண்டியன் கதை' (1974). இரண்டாவது நூல் 'நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம்' கையெழுத்துப் பிரதியை பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சியை சுவைபட எழுதியிருக்கிறார்.
ஏட்டுப்புற இலக்கியங்கள் தொல்காப்பியம் தொடங்கி, இன்று வரை வளர்ந்துவருவது போலவே நாட்டுப்புற இலக்கியங்களும் அவ்வாறே வளம் பெற்றுள்ளன. ஆனால், இரண்டும் வெவ்வேறு இலக்கியவகை என்றாலும் வேறுபட்ட இலக்கிய வகை அல்ல. 'ஒன்றினுள் ஒன்று கலந்தது- கனிந்தது' என்கிறார் நூலாசிரியர்.
தன்னால் எழுதப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட 51 நூல்கள் குறித்த விவரங்களில்- பழையனூர் நீலி கதை, தேசிங்குராஜன், மதுரை வீரன், சுடலைமாடன் வழிபாடு, கண்ணகி கதைகள், கட்டபொம்மு கதைப்பாடல், மருதநாயகம் உள்ளிட்ட நூல்களுடன், நெல்லை, குமரி, திண்டுக்கல், புதுச்சேரி, கொங்கு, நாமக்கல், ஈரோடு பகுதிகளில் வழங்கும் கதைகளையும், பாடல்களையும் நூலாக்கியதை தனித்தனியாக விவரித்திருக்கிறார். நூலின் இறுதியில் தான் நடத்திய 'தன்னனானே' ஆய்விதழ் குறித்தும் தன்னனானே காவ்யா பதிப்பகங்கள் மூலம் பதிப்பித்த நூல்கள் பட்டியலையும் கொடுத்துள்ளார். நாட்டுப்புறவியல் - ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த கையேடாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.