ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

121. அரனை உள்குவீர் - பாடல் 3

இறைவனை அழைத்து

News image
Updated On :18 பிப்ரவரி 2019, 5:17 am


பாடல் 3:

    நாதன் என்பீர்காள்
    காதல் ஒண் புகல்
    ஆதி பாதமே 
    ஓதி உய்ம்மினே

விளக்கம்:

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை நினைத்தும் அவனைக் கண்டும் மகிழுமாறு நம்மைத் தூண்டிய சம்பந்தர், இந்த பாடலில் அவனை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்று அழைக்குமாறு ஆலோசனை கூறுகின்றார். புகல்=புகலி நாதா என்று இறைவனை அழைத்து பலன் அடைவீர்களாக என்று சம்பந்தர் கூறும் பாடல் நமக்கு பழனம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.67.1) நினைவூட்டுகின்றது. பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்றும் நக்கா என்றும் நம்பா என்றும் அவனை அழைத்து அவனது திருவடிகளை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.    

    வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருது ஏறிப்
    பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்
    நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
    பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே 

புகலி என்ற சொல் புகழ் என்று குறுகியுள்ளது. ஒள் என்ற சொல் புகல் என்ற சொல்லுடன் சேரும் போது ஒண்புகல் என்று மாறுபடுகின்றது ஒள் என்ற சொல்லுக்கு, ஒளி அழகு நல்ல மேன்மையுடைய என்று பல பொருட்கள் உள்ளன. ஒள் என்ற சொல்லினை புகலி என்ற சொல்லுடன் சேர்த்தும் ஆதி என்ற சொல்லுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே. புகல் ஆதி=புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உள்ள ஆதி முதல்வன். .காதல் என்ற சொல்லினை ஓதி என்ற சொல்லுடன் இணைத்து, மிகுந்த அன்புடன் ஓதி என்று பொருள் கொள்ள வேண்டும்; ஓதி=துதித்து, புகழ்ந்து பாடி;

பொழிப்புரை:

சிவபெருமானை உங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனை நாதன் என்று அழைக்கும் அடியார்களே, புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உறைபவனும், ஒளியுடன் பிரகாசிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக திகழ்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை புகழ்ந்து பாடி, வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.