காதல் செய்வதற்கு ஊனம் என்பது தடையில்லை என்பதை நிரூபித்து வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திவருகிறார் திருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பி. கிருஷ்ணசாமி.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி. கிருஷ்ணசாமி (40). இவருக்கு 5 வயதாக இருக்கும்போது போலியோ காரணமாக இரு கால்களின் செயல்பாட்டையும் இழந்துவிட்டார். எனினும் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தும் மனம் தளராமல் படித்து பி.காம். படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு தனது உறவுக்கார பெண்ணான பிரியதர்ஷினியை 3 ஆண்டுகளாகக் காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிருஷ்ணசாமியின் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் அவரை காதலித்துள்ளார் பிரியதர்ஷினி. இந்தத் தம்பதிக்கு தரணிதரன்(12) என்கிற மகனும், திவ்யதர்ஷினி (10) என்கிற மகளும் உள்ளனர்.
காதலர் தினம் தொடர்பாக தம்பதியினர் கூறியதாவது:
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் காதலிக்கின்றனர். இதில், பெரும்பாலான காதல் திருமணத்தில் முடிவதில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. ஒரு மனிதனுக்கு காதல் என்பது உடலையோ, அழகையோ, நிறத்தையோ பார்த்து வருவது கிடையாது என்பதற்கு எங்களது திருமணம் ஒரு சான்றாகும். நான் தற்போதும் மூன்று சக்கர வாகனத்தில் பிள்ளைகளின் வீட்டுக்கே சென்று டியூசன் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆகவே, உடல் ஊனத்தைப் பெரிய குறையாக நினைக்காமல் தங்களுக்கு பிடித்தமானவர்களை காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்கின்றனர்.