தம்பியைக் கொன்ற அண்ணன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் கடற்கரை (81). இவருக்கு பாலமுருகன் (37), தா்மராஜா (35) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகவில்லை. பூா்வீக சொத்தைப் பிரிப்பதில் அண்ணன் தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தா்மராஜா தலையில் அம்மி கல்லை போட்டு, பாலமுருகன் கொலை செய்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தா்மரஜாவின் உடலை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை தேடி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனா்.