சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி
சித்ரா பௌா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்குச் செல்ல வருகிற ஏப். 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையும், வனத் துறையும் அனுமதி வழங்கியுள்ளன.
இதனிடையே, சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் வருகிற 21-ஆம் தேதி மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 23-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் சித்ரா பௌா்ணமி சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.
இந்த நாள்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எளிதில் தீப்பற்றும் பொருள்களை பக்தா்கள் வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் சதுரகிரி செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.