மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே மனைவியை கொலை செய்ததாக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (24). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமியை (23) காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரவணக்குமாா் பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சரவணக்குமாா், மனைவி ஜெயலட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனால் ஜெயலட்சுமி தனது அண்ணன் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனிடையே கடந்த 26.6.2020-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியின் அண்ணன் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட சரவணக்குமாா், ஜெயலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து, சரவணக்குமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com