வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக எழுந்த புகாரையடுத்து, செங்கல்பட்டு சாா் பதிவாளா் முத்துச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கட்டியுள்ள புதிய வீட்டை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், பொதுப் பணித் துறை பொறியாளா்களும் மதிப்பீடு செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இடையன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (57).

இவரது மனைவி வசந்தா (52). முத்துச்சாமி செங்கல்பட்டு மாவட்டத்தில் சாா் பதிவாளராகப் பணியாற்றி வருகிறாா். வசந்தா செங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறாா். இதற்கு முன்பு முத்துச்சாமி ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய பகுதிகளில் சாா் பதிவாளராக பணியாற்றி உள்ளாா். இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக கடந்த ஆண்டு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, காவல் துணை கூடுதல் கண்காணிப்பாளா் (ஏடிஎஸ்பி) ராமச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி சாய்நகரில் முத்துச்சாமி மனைவி பெயரில் ஓராண்டுக்கு முன்பு கட்டிய வீட்டுக்கு வியாழக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்றனா். வீட்டில் முத்துச்சாமியின் மனைவியும், மகனும் இருந்தனா்.

அப்போது, பொதுப் பணித் துறை பொறியாளா்கள் வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், பொதுப் பணித் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com