
இணையவழி குற்றங்களில் 'போலி இணையதளம்' மூலமாக மோசடி செய்வதும் முக்கியமான ஏமாற்று வழியாக இருக்கிறது.
அரசின் சேவைகளைப் பெறவும் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறவும் போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதற்காக மோசடி கும்பல், அரசு இணையதளங்களைப் போன்ற தோற்றம் கொண்ட போலி இணையதளங்களை உருவாக்கி மக்களை நம்ப வைக்கிறார்கள்.
அரசின் சேவைகளைப் பெற அடிப்படை ஆவணங்களான ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் மாற்றம் செய்வதற்கும் புதிதாக அவற்றுக்கு விண்ணப்பிக்கவும் இந்த போலி இணையதளங்களைக் காட்டி ஊக்குவிக்கிறார்கள்.
மக்களும் போலி இணையதள முகவர்களை நம்பி தனிப்பட்ட ஆவணங்களை அதுகுறித்த விவரங்களை அளிக்கின்றனர்.
அந்த விவரங்களைப் பயன்படுத்தி பண மோசடி உள்ளிட்ட ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர் மோசடியாளர்கள்.
ஆதார், பான், வங்கி விபரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு பெற்று அதன் மூலமாக உங்களுடைய வங்கிக்கணக்குகளை ஹேக் செய்து பணத்தைத் திருடுகிறார்கள் அல்லது மக்களை மிரட்டியும் பணம் பறிக்கின்றனர்.
வேறொரு வகையில் பதிவு கட்டணம், சேவைக்கான வரி என்றெல்லாம் சொல்லி பணம் பெறுகிறார்கள்.
அரசின் மானியங்கள், அரசு கடன் ஆகியவற்றுக்குத்தான் மக்களை தொடர்புகொள்கிறார்கள்.
பாதுகாப்பாக இருக்க என்ன வழி?
இணையதளத்தின் URL-ஐ சரிபார்க்கவும். அரசு இணையதளங்கள் பொதுவாக "gov.in" என முடிவடையும்.
இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
அரசின் திட்டங்களை, மானியங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறும் போன் அழைப்புகள் அல்லது முகவர்களை நம்ப வேண்டாம். இதுபோன்ற குறுஞ்செய்திகள் அல்லது சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
அரசின் அலுவலகங்கள், இ-சேவை மையம் போன்ற அதிகாரபூர்வ உதவி மையங்கள் மூலமாக மட்டுமே சேவையைப் பெற வேண்டும்.
அரசு விழிப்புணர்வு
போலி இணையதளங்கள் பற்றி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில்கூட மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின்(தகவல் சரிபார்ப்பு அமைப்பு) ஒரு பதிவை இட்டுள்ளது.
பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்றுத் தருவதாக போலி விளம்பரம் செய்த 'https://brs.inc' என்ற போலி வலைத்தளம் குறித்து பதிவிட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை நம்ப வேண்டாம் என்றும் இது அரசின் அதிகாரபூர்வ இணையதளம் அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எனவே அரசின் சேவைகள், அரசுத் திட்டங்களின் கீழ் பயன் பெற அதிகாரபூர்வ இணையதளங்களை உறுதி செய்து பின்னர் பயன்படுத்தவும். சந்தேகமாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்க அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவேளை போலி இணையதளம் மூலமாக மோசடிக்கு ஆளானால் 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.