செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!

செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை
செல்போன் கடன் செயலிகள்
செல்போன் கடன் செயலிகள்
Published on
Updated on
1 min read

கடன் பெறுவது என்பதே, மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கடன் பெற்று அவர்களின் வலையில் வீழ்வது என்பது மிகப்பெரும் துயரம்.

மோசடியாளர்கள், ஆன்லைன் கடன் செயலி மூலம் எளிய மக்களை ஏமாற்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறோம் என ஏமாற்றுகிறார்கள்.

குறைந்த வட்டி மற்றும் எளிய முறையில் கடன் கிடைக்கிறதே என்று எண்ணி, செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து விடுவார்கள். ஆனால், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே, அது, உங்கள் செல்போனில் இருக்கும் தொடர்பு எண்களை பயன்படுத்த அனுமதிப்பீர்களா என்று கேட்கும். அதற்கு ஆம் என்று சொன்னால்தான், அடுத்து கட்டத்துக்கு நகரும். ஒருவேளை, மறுத்துவிட்டால், கடன் செயலி பதிவிறக்கம் ஆகாது. பதிவிறக்கம் செய்ய நினைத்தவருக்கு வெறும் பணப்பிரச்னை மட்டுமே இருக்கும்.

ஆனால், தொடர்பு எண்களை பயன்படுத்த அனுமதி கொடுத்து, கடன் செயலியை பதிவிறக்கமும் செய்துவிட்டால், ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லில் மாளாது.

சில செயலிகளோ ஒரு செல்போனில் இருக்கும் புகைப்படங்களையும் பயன்படுத்த அனுமதி கோரும். ஆனால், ஒரு கடன் செயலிக்கு இந்த தகவல்கள் ஏன் தேவை என்று பதிவிறக்கம் செய்யும் யாருமே யோசிக்கப்போவதில்லை.

ஒருவேளை, எல்லாவற்றுக்கும் ஆம் என்று கொடுத்து கடன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அவசரத் தேவைக்கு வெறும் ஆயிரம் அல்லது 3 ஆயிரம் கடன் பெற்றவர்கள் அதனை திரும்பிக் கொடுத்தாலும் கூட அவர்கள் செயலாக்கக் கட்டணங்கள் என பல விஷயங்களுக்காக கடன் பெற்றவர்களை திரும்பத் திரும்ப பணம் அனுப்புமாறு தொல்லைக் கொடுக்கும் கும்பல், கடன் பெற்றவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டால், அவரைப் பற்றி அவதூறாக அவருடைய தொடர்பு எண்களுக்குத் தகவல் அனுப்பப்படும் என மிரட்டுகிறார்கள்.

மேலும், சில மோசடி கும்பல்கள், கடன் பெற்றவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து விடியோவாக பதிவேற்றுவோம் என்று மிரட்டி பணம் பிடுங்கும் சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.

நமது சொந்த பந்தங்களுக்கு, நம்மைப் பற்றி தவறான தகவல்கள் அனுப்பப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் மோசடி கும்பல் கேட்கும் பணத்தை கடன் பெற்றாவது கொடுத்து விடுவார்கள்.

இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக புகார் கொடுக்கும்பட்சத்தில் சைபர் குற்றவாளிகளிடமிருந்து தப்பிக்கலாம் என காவல்துறை எச்சரிக்கிறது.

செய்யக் கூடாதது என்ன?

நம்பகத்தன்மையற்ற இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இல்லாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற வேண்டாம்.

எந்த செயலிக்கும் தொடர்பு எண்கள் அல்லது புகைப்படங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து இந்த கடன் செயலிகளை நாட வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com