

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷம் ராசியுடனும், செவ்வாய்க் கிரகத்துடனும் தொடர்பு உள்ளவர்களாக இயற்கையாக அமையப் பெற்றவர்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தின் தீய கதிர் வீச்சுகள் படும் போது அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் கெட்ட குணங்களும் உண்டாகிவிடும். நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பார்கள். கெட்ட நண்பர்களால் ஏற்படும் அனைத்து பழக்கங்களும் இவர்களிடம் வந்துவிடும். பலவகையான நோய்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இதை அஸ்வினி தோஷம் என்பார்கள்.
எட்டி மரம் அஸ்வினி நட்சத்திர தோஷத்தை நீக்குகிறது. கெட்டவர்களை நல்லவர்களாக ஆக்குகிறது. தீய எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் தோன்ற வைக்கிறது.
எட்டி மரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப் பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத் தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டுவிட்டால் மரணமும் ஏற்படலாம்.
ஆனால் அதே எட்டி மரம் அஸ்வினி நட்சத்திரத்தின் நச்சுத்தன்மையையும், கெட்ட கதிர் வீச்சுக்களையும் அதனால் ஏற்பட்ட உடல்மாற்றம், மனமாற்றம் மற்றும் நோய்களையும் சரி செய்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
அஸ்வினி நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் தினசரி அரை மணி நேரம் எட்டி மரத்தைக் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம். மருத்துவர்கள் தரும் எட்டி மரத்தால் தயாரிக்கப்பட்ட மருந்தைச் சாப்பிடலாம். ஆரோக்கியம் இருக்கும்.
தொடர்புள்ள நோய்கள்
காலரா, நாள்பட்ட புண்கள், கால்பக்க வாதம், மாதவிடாய்ப் பிரச்னைகள், சர்க்கரை நோய், தொற்றுநோய்கள், பக்கவாதம், காய்ச்சல், காயங்கள், வயிற்றுப்புண், முதுகு தண்டுவலி, தோல்நோய்கள், விஷக்கடி, கரப்பான், வலிப்பு நோய் முதலியவையாகும்.
எட்டி விதையைச் சுத்தம் செய்து விஷத்தன்மை நீக்கி 3 முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
1. ஹப்பே அஜாராகி: மிளகு வடிவில் உள்ள இந்த மாத்திரை தினசரி 1 சாப்பிடலாம்.
2. மாஜுன் அஜாராகி: கால் டீ ஸ்பூன் அளவில் இந்த லேகியத்தைப் பாலுடன் இரவில் ஒரு வேளை சாப்பிடலாம்.
3. ரோகன் அஜாராகி: இந்த எண்ணெய்யை லேசாக சுட வைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.
இந்த மூன்று மருந்துகளையும் உலகப் புகழ்பெற்ற ஆயுர்வேத, யுனானி, சித்த மருந்து கம்பெனிகள் தயாரித்து கடைகளில் விற்கின்றனர்.
குணம் பெறும் நோய்கள் :
நரம்பு வலிகள், நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வாய்க்கோணல், கை,கால் உடல் இயங்காமை, எலும்பு தேய்மானம், மூட்டுவலி பார்க்கீனிசம் என்னும் நடுக்கநோய், இளம்பிள்ளை வாதம், மஸ்குலர் டெஸ்ட்ரோபி என்னும் சதை அழிவு நோய், தோள்பட்டை வலி, இடுப்பு வலி, ஆண்மையிழப்பு, இருமல், ஆஸ்துமா, பிராஸ்டேட் என்லார்ஜ்மென்ட், முதுமையில் அடிக்கடி சிறுநீர் பிரிதல் போன்ற நோய்கள் குணம் பெறுகின்றன.
பயன்கள்:
பசியின்மை, தொண்டை வறட்சி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுவலி, அஜீரணம் போன்ற பலவிதமான பிரச்னைகளுக்கு எட்டி மரம் நல்ல பலன் தருகிறது.
எட்டி மரத்தின் விதைகளைப் பக்குவப்படுத்தி, அதில் இருந்து விஷத்தன்மைகளை முறித்தெடுத்து மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இதற்காக சிறுகீரை வேர்க் கஷாயத்தில் எட்டி விதைகளைப் போட்டு கொதிக்க வைத்து, ஆற வைத்து வெண்ணெயில் கலந்து, பாலில் கொதிக்க வைத்து, பிறகு மீண்டும் தண்ணீரில் கொதிக்க வைத்து பலபடி பக்குவ முறைகளுக்குப் பிறகுதான், எட்டி விதையிலிருந்து விஷ நீக்கம் செய்யப்படுகிறது.
நாள்பட்ட தோல் நோய்கள், தொற்றுப் பாதிப்புகள், இருமல், மூச்சிரைப்பு, சுவாசக் கோளாறுகளுக்கு இவை நல்ல பலன் தருகிறது.
எட்டி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு மூட்டு வலிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள். வயிற்றில் உள்ள நாடாப் புழுக்களின் வளர்ச்சி, பித்தப்பைக் கோளாறுகள், மஞ்சள் காமாலை நோய் போன்றவற்றிலும் இவை நல்ல மருந்தாகப் பயன்படுகின்றன.
இதுபோன்ற எண்ணற்ற பலன்களும், மருத்துவ குணங்களும் எட்டி மரத்துக்கு இருப்பதாக மூலிகை மருத்துவம் கூறுகிறது. இதை 60 முதல் 250 மில்லி கிராம் வரையில் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.