

பல தரப்பிலும் சிறப்பான படம் என பாராட்டு பெற்ற "சயனைடு' (குப்பி) படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ள புதிய படம் "காவலர் குடியிருப்பு'. முதல் படத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளியான சிவராசனின் பின்புலத்தை அலசிய இயக்குநர் இந்தப் படத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இதுபற்றி கேட்டபோது...
""நாட்டில் நடக்கும் கலவரங்கள் பல குடும்பங்களைச் சிதைத்து ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியிருக்கின்றன. பலரை சிறைகளுக்கும் அனுப்பியுள்ளன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதைத் தொடர்ந்து பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இத்தனையும் நடந்தது. அதே கலவரத்தில் இரு இளம் உள்ளங்கள் இணைந்தது யாரும் அறிந்திராத செய்தி. கலவரத்தில் இணைந்த அந்த உள்ளங்கள் கால வெள்ளத்தில் எப்படியெல்லாம் அடித்துச் செல்லப்பட்டது என்பதை நேர்மையாகச் சொல்லியிருக்கிறேன். காதல், தியாகம், தாய்ப்பாசம், விசுவாசம், நன்றிக்கடன் இவை எல்லாவற்றுக்கும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கிய ஒரு தமிழ் இளைஞனின் செல்லுலாய்ட் வடிவமே "காவலர் குடியிருப்பு'. படத்தில் 1968, 1992, 2009 என மூன்று கால கட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை துவாரகநாத் மூன்று தனித்தனி வண்ணங்களில் உயிரோட்டமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய இசையில் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார்'' என்றார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.