மிஸ்டர் ஹீரோயின்!

  நான்கு கிராமத்து இளைஞர்கள் ஒரு நகர்ப்புறத்து நாயகி ஆகியோரை வைத்து வித்தியாசமாக உருவாகி வரும் புதிய படம் "மாத்தி யோசி'. நந்தா பெரியசாமி படத்தை இயக்குகிறார். ""இந்தப் படத்தில் "பருத்தி வீரன்' முத்தழகு
மிஸ்டர் ஹீரோயின்!
Updated on
1 min read

  நான்கு கிராமத்து இளைஞர்கள் ஒரு நகர்ப்புறத்து நாயகி ஆகியோரை வைத்து வித்தியாசமாக உருவாகி வரும் புதிய படம் "மாத்தி யோசி'. நந்தா பெரியசாமி படத்தை இயக்குகிறார்.



""இந்தப் படத்தில் "பருத்தி வீரன்' முத்தழகு போல என்னுடைய கேரக்டர் இருக்கும். இதில் நான் ஹீரோக்களுக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கிறேன். சொல்லப்போனால் ஐந்து ஹீரோக்களில் நானும் ஒருத்தி. அதனால் என்னை மிஸ்டர் ஹீரோயின் என்றே அழைக்கலாம்.



நான் ஏற்கெனவே "மயிலு', "காஞ்சிவரம்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவற்றிலிருந்து இது வித்தியாசமான கிராமத்துப் படமாக இருக்கும். இந்தப் படத்துக்காக மட்டும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஓடியிருக்கிறேன். க்ளைமாக்ஸ் புல்லரிக்க வைக்கும். "மாத்தி யோசி' வெளிவந்தால் எல்லோரும் நல்லவிதமாக யோசிப்பார்கள்'' என்றார் ஷம்மு.



***********************



மாடர்ன் குரு



ஆந்திர அரசின் விருதுகளை ஏற்கெனவே பெற்றிருந்தாலும் முதல்முறையாக "சிவாஜி' படத்துக்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசு விருது பெற்றிருக்கிறார் சுமன். விருது பற்றி கேட்டபோது...

  ""தெலுங்கில் பல படங்களில் கடவுள் வேடங்களிலும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறேன். "சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்தவுடன் நடிக்கலாமா? வேண்டாமா? என யோசித்தேன்.



ரஜினியும் ஷங்கரும் கண் முன் வந்தனர். உடனே நடிக்கச் சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்துக்காக ரஜினியுடன் சுமார் 15 மாதங்கள் ஒன்றாகவே இருந்ததை, விருதை விடப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இன்றைய சூழ்நிலையில் ரஜினியிடம் பேசி, பழகுவது என்பது மிகப் பெரிய விஷயம்.



அப்படிப்பட்டவரிடம் மாதக் கணக்கில் பழக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்! அப்போது சினிமா, குடும்பம், ஆன்மிகம், வாழ்க்கை பற்றிய பல தத்துவங்களை எளிமையாக விளக்கினார் ரஜினி. அவர் என்னுடைய "மாடர்ன் குரு'. இன்னும் மூன்று நான்கு வருடங்கள் நடித்துவிட்டு பொதுச் சேவையில் இறங்க தீர்மானித்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சி இப்போது செயல்படுவதைப் போல தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால் அந்தக் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவேன்'' என்றார்.

***********************

குறைந்த பட்ஜெட்! பிரம்மாண்ட படம்!

  சர்வதேச கடல் பரப்பில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வரும் சோமாலியா கடற்கொள்ளையர்களால் தமிழகத்துக்கு ஆபத்து வருகிறது. அதை ஹீரோக்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை "மாற்றிக் காட்டுவோம்' என்ற படத்தின் மூலம் வித்தியாசமாகச் சொல்கிறார் இயக்குநர் அ.ஹாளிது.

"சோமாலியா தீவு போன்ற "செட்'டை சென்னை பழவேற்காட்டில் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படத்தைத் தர முடியுமா என்ற எண்ணத்தை இந்தப் படம் மாற்றிக் காட்டும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com