
வானத்தில் அம்பு வடிவிலும் புடலம்பூ வடிவிலும் ஒருவகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும். இதற்குப் பூசம் நட்சத்திரம் என்பார்கள். இந்த நட்சத்திரத்தின் போது கல்வி, வீடு கட்டும் பணி துவக்கம் போன்றவற்றைத் தொடங்குவார்கள். செடி, கொடிகளையும் இந்நட்சத்திரத்தில் நடுவார்கள். பூசம் நட்சத்திரம் மூலிகை அறுவடை செய்தல், மருந்தைத் தயாரித்தல், அம்மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்துச் சாப்பிட வைத்தல் ஆகியவற்றுக்கு உகந்த நட்சத்திரம்.
பூசம் நட்சத்திரத்துக்கும் அரச மரத்துக்கும் நேரடித் தொடர்புகள் இருக்கின்றன. அதனால்தான் கிராமங்களில் அரச மரத்தடியில் பள்ளிக்கூடங்களும், பஞ்சாயத்துகளில் தீர்ப்பு சொல்வதும், தெய்வ சிலைகளை வைத்து வணங் குவதும் இன்றும் புழக்கத்தில் உள்ளன. அந்த அளவிற்கு நிழல், காற்று அனைத்தும் மனிதனைத் தூய்மையாக்குகிறது. ஹோமங்களில் அரச மரக் குச்சிகளை விசேஷமாகப் பயன்படுத்துவார்கள்.
பூசம் நட்சத்திரத்திம், கடக ராசி சந்திர கிரகத்தில் பிறந்தவர்களுக்கு, திங்கட்கிழமை மற்றும் ஜூன் 21 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்களுக்கும் அரச மரம் பயன்தரும் மரமாகும். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷங்களையும், நோய்களையும் அரச மரம் குணமாக்குகிறது. இதற்கு அரை மணி நேரம் அரச மரத்தைக் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம். அல்லது அதனால் செய்யப்பட்ட மருந்துகளைச் சாப்பிடலாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வீட்டிலோ, தோட்டத்திலோ, தொழிற்கூடத்திலோ அரச மரத்தை நட்டுப் பயன்பெறலாம். இதன் பழங்கள், இளந்துளிர்கள், மரப்பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு பங்கு சர்க்கரை, ஒரு பங்கு தேன் கலந்து குடிப்பார்கள். இது பாலுணர்வு சக்தியை வலுப்படுத்துகிறது என்று சரகா மற்றும் சுஸ்ருதா எனும் ஆயுர்வேத அறிஞர்கள் கூறியுள்ளனர்.
பழங்களை மட்டும் பவுடராக்கி ஏழு கிராம் அளவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வர பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண்களின் ஆரோக்கியமான இந்திரியம் உருவாகி உயிரணுக்கள் அதிகரிக்கும். மரப்பட்டையை மட்டும் ஏழு கிராம் எடுத்துக் கஷாயமிட்டு கொடுத்தால் இருமல் குணம் பெறும். அடிபட்ட காயங்கள் மீது அரச இலைகளை வைத்துக் கட்டினால் விரைவில் குணம் பெறுகிறது.
கடந்த இதழ்களில் கட்டுரை எண் 8 இல் வியாழன் கிரகத்திலும் அரச மரத்தின் பயன்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளேன். அதையும் படித்துப் பயன்பெறலாம்.
அரச மரத்தில் உயர்ந்த ரகம் ஒன்று இருக்கிறது. அதற்குக் கொட்டைப் பூவரசன் மரம் என்பார்கள். பொதுவாக, கோயில்களில் நட்டு வைப்பார்கள். இது சாதாரண அரச மரத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் பெரிய மரமாக இருக்காது. சிறிய மரமாகவே இருக்கும். அழகான மஞ்சள் நிறப் பூக்கள் இருக்கும். முற்றிய காய்களை உரித்துப் பார்த்தால் ஏழு அல்லது ஒன்பது விதைகள் இருக்கும். இந்த மரத்தின் காய், இலைகள், விதைகள், பட்டை ஆகிய நான்கையும் எரித்துச் சாம்பலாக்கி வெண்ணெயில் கலந்து பூசி வர வெண்குஷ்டம், வெள்ளைத் தழும்புகள், முகத்தில் காணப்படும் மங்கு குணம் பெறுகிறது.
வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டனில் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் அமைந்துள்ள ஞானமலையில் நூற்றுக்கணக்கான அரச மரங்களையும், கொட்டைப் பூவரச மரங்களையும் காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.