திரைக்கதிர்: ராணி முகர்ஜி!

ராம்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த ராணி முகர்ஜியை ரசிகர்கள் மறக்க முடியாது. ஹிந்தியில் முன்னணி நடிகையான இவர், சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். டி.வி.ஷோக்களில் தலைக் காட்டுவதோடு சரி. அண
திரைக்கதிர்: ராணி முகர்ஜி!
Updated on
3 min read

ராம்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த ராணி முகர்ஜியை ரசிகர்கள் மறக்க முடியாது. ஹிந்தியில் முன்னணி நடிகையான இவர், சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். டி.வி.ஷோக்களில் தலைக் காட்டுவதோடு சரி.

அண்மையில் தனது நண்பர் ஒருவர் மும்பையில் தொடங்கிய ஆடைகள் ஷோரூமை திறந்து வைத்தார் ராணி. ஆடைகள் ஷோரூமில் பல வகை ஆடைகளுக்குப் பின்னாலும் நின்று போஸ் தருமாறு போட்டோகிராபர்கள் கேட்டனர். அதே போல் ராணியும் சளைக்காமல் போஸ் தந்து போட்டோகிராபர்களை உற்சாகப்படுத்தினார்.

மணமகளுக்கான கல்யாண ரெடிமேட் ஆடைகள் வைக்கப்பட்டிருந்த இடம் வந்தது... மேடம்... மேடம்... இங்கேயும் ஒரு போஸ் என போட்டோகிராபர்கள் கோரிக்கை வைக்க, அதுவரை சகஜமாக இருந்த ராணியின் முகம் மாறியது. நோ இந்த இடத்தில் நான் நிற்க மாட்டேன் என்றார்.

அதற்கான காரணமும் அவரே சொல்கிறார். கேளுங்கள்... ""கல்யாண ஆடைகளை வாங்க ராணி வந்திருக்கிறார். அவருக்கு விரைவில் திருமணம் என நீங்க கிசுகிசு பரப்பி விடுவீங்க. அதற்கு நான் ஆள் அல்ல. உங்கள் ஆசை நிறைவேறாது'' என்றிருக்கிறார். மேலும் போட்டோ எடுத்தது போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எனப் பாய்ந்திருக்கிறார் ராணி.

பதிலுக்குப் போட்டோகிராபர்கள் மீடியா பவரில் வாக்குவாதம் செய்ய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வந்து சமாதனப்படுத்தி இருக்கிறார்கள். பின் ராணி அங்கிருந்து சென்று விட்டாராம். ஹிந்தி தயாரிப்பாளர் யாஷ் ஷோப்ராவின் மகனும் இயக்குநருமான ஆதித்யா ஷோப்ராவுடன் ராணிக்கு விரைவில் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டு வருவதுதான் ராணியின் இந்த கோபத்துக்குக் காரணமாம்.

நடிப்பை தாண்டி வருவாயா?

"விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நடித்தவர் சமந்தா. அடுத்து "பாணா காத்தாடி'யில் நடிக்கிறார். "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமிழில் திரிஷா நடித்த வேடத்தில் நடித்திருந்தார். அதில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா அவருக்கு ஜோடி. சைதன்யாவின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் சமந்தா.

இந்நிலையில், சமந்தாவுக்கு சில படங்களில் நடிக்க சைதன்யா சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்டால்... ""சைதன்யா எனக்கு நல்ல நண்பர் என சொல்ல மாட்டேன். சினிமாவில் எனக்கு பெஸ்ட் ஜோடி.. அவ்வளவுதான். அவரது அடுத்த படத்திலும் நடிப்பதால் இப்படி சொல்லவில்லை. நாங்கள் ஜோடி சேர்ந்த படத்தைப் பார்த்தவர்கள் இப்படி சொல்லுகிறார்கள்.

இயக்குநரின் முடிவில்தான் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன். சைதன்யா யாரிடமும் எனக்காக சிபாரிசு செய்யவில்லை. நான் யாரையும் காதலிக்கும் எண்ணத்தில் பழகவும் இல்லை. இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் வைத்துள்ளேன். காதலுக்கு இப்போது நேரமே இல்லை'' என்றார் சமந்தா.

திலகன் தன் தொட்டிலுக்கு...

சமீபத்தில் மலையாள இயக்குநர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் இரு அணிகள் பிரிந்தன. குறிப்பிட்ட சங்கத்தில் இயங்கும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க கூடாது என நடிகர்களுக்கு அங்குள்ள நடிகர் சங்கம் தடை விதித்தது.

அதை நடிகர் திலகன் மீறியதுடன் மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து மோகன்லால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நடித்து வந்த அனைத்து படங்களிலிருந்தும் நீக்கப்பட்டார். வேறு புதிய பட வாய்ப்புகளும் வரவில்லை. தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் திலகன், இங்கு ஒரு சில நடிகர்களிடம் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டார்.

அதற்கும் பலன் இல்லை. நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் திலகன். தற்போது திரையுலகம் கைவிட்டதால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடகத் துறைக்கே திரும்பி விட்டார். அவரது நெருங்கிய நண்பர்கள் விநயன் மற்றும் மணிலால் நடத்தும் அக்ஷராஜ்வாலா என்ற நாடக குழு மூலமாக திலகன் களம் இறங்கி இருக்கிறார். கேரளத்தில் நடக்கும் தற்போதைய அரசியல் நிலவரத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த நாடகத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார்.

இந்த நாடகத்தின் தொடக்க விழாவை தடபுடலாக நடத்தவும் திட்டம் வைத்திருக்கிறாராம் திலகன்.

பிபாஷாவுக்குத் தடை!

இந்திய திரைப்பட விருது விழா இலங்கையில் நடந்தபோது, அதில் பங்கேற்க தமிழ் நடிகர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பாலிவுட் கலைஞர்களும் அதில் பங்கேற்க வேண்டாம் என தமிழ் திரை அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதை ஏற்று அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லவில்லை. ஹிந்தி நடிகர்கள் சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், நடிகைகள் பிபாஷா பாசு, கேத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் திரை அமைப்புகளின் கோரிக்கையை மீறி விழாவில் கலந்துக் கொண்டனர்.

இவர்களின் படங்களைத் தமிழகத்தில் திரையிடவிட மாட்டோம் என தமிழ் திரையுலக கூட்டமைப்பு அறிவித்து, அப்போது தமிழக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த ஹிருத்திக் ரோஷன் நடித்த "கைட்ஸ்' படத்தை உடனடியாக நிறுத்தினர்.

இந்நிலையில் பிபாஷா பாசு, சஞ்சய்தத் நடித்துள்ள லம்ஹா தற்போது சென்னையில் திரைக்கு வந்துள்ளது. பிபாஷா பாசு, சஞ்சய்தத் இருவருமே இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்றவர்கள். இவர்கள் படத்துக்கு தடை விதிக்காததால், ஹிந்தி நடிகர்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது...

""ஏற்கனவே தயாரிப்பில் இருந்த சில ஹிந்தி படங்களை தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். அதற்கு முன்பே இலங்கை பட விழா நடந்தது. ஏற்கனவே வாங்கிய படங்களுக்கு தடை விதிக்க வேண்டாம் என ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம்சேம்பர் கேட்டுக் கொண்டது.

அந்த வகையில் ஹம்லா முன்பே வாங்கப்பட்ட படம். மற்றபடி ஹிந்தி நடிகர்களுக்கான தடையை நீக்கவில்லை. இலங்கை பட விழாவில் கலந்து கொண்ட நடிகர்களின் எந்தப் படங்களையும் வாங்க கூடாது என விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளோம். மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வெளிவந்தாலும், தமிழகத்தில் கண்டிப்பாக வெளிவராது'' என்றார்.

கண்டோம், தஞ்சை பெரிய கோவிலை!

ஸ்ரீசிவ செல்வநாயகி அம்மன் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "கண்டேன்'. "சித்து பிளஸ் டூ', "ஆயிரம் விளக்கு' படங்களைத் தொடர்ந்து பாக்யராஜ் மகன் சாந்தனு இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஆந்திரத்தைச் சேர்ந்த ரஷ்மி கௌதம் அறிமுகமாகிறார். சந்தானம், விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரம் ஏற்கிறார்கள். ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளர் பிரசாத் டி.மிஷால் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர்கள் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரபுதேவா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஏ.சி.முகில் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். படம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது... ""காதல் கதைதான்.

அதை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். கதையை போல் பாடல் காட்சிகளும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி, பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பாடல் காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் தஞ்சை பெரிய கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கினோம். சுமார் 100 பேர் கொண்ட குழு தஞ்சை சென்றது.

திடீரென படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்று சொல்லப்பட, சென்னை திரும்ப முடிவெடுத்தோம். படக்குழுவினரின் சூழ்நிலை உணர்ந்து அனுமதி வழங்கப்பட்டது. பின் சாந்தனு, ரஷ்மி பங்கு பெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எடுக்கப்பட்ட இந்தப் பாடல் நிச்சயம் பேசப்படும்'' என்றார்.

இலியானாவின் இலக்கு!

ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் "கேடி' படத்தில் நடித்தார் இலியானா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின், விக்ரம் ஜோடியாக நடிக்க தமிழுக்கு வந்துள்ளார். விக்ரமின் பட வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் முடிவெடுத்திருக்கிறார் இலியானா. சினிமாவில் நடிக்கும்போது விளம்பரங்களில் நடிக்க கூடாது என சிலர் சொல்கிறார்கள்.

அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்போது அதை பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. சினிமாவில் நடித்துக் கொண்டே விளம்பரங்களில் நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. ரசிகர்களிடம் மவுசு குறைந்து மார்க்கெட் போய் விட்டால் யாரும் நம்மை தேடப் போவதில்லை. மற்றவர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை. என்னை பொறுத்தவரை. சில கொள்கைகளை கடைப்பிடிக்கிறேன். தரமான பொருள்களுக்கான விளம்பரத்தில் மட்டுமே நான் நடிக்க சம்மதிக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com