

""சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. எனது நண்பர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதைப் பெற்றிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு தமிழனாக நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயங்களில் அதுவும் ஒன்று. அரசியலுக்கு வரும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. அதிக படங்களில் என்னுடன் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. அவரை மறக்கவே முடியாது. அப்போது எங்களுக்குள் காதல் இருந்ததாக ஒரு கதை ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்றுகூட பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.
ஸ்ரீதேவியின் அம்மாவும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் உண்மை அது இல்லை. என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. மீண்டும் ஒரு படம் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் எனப் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதை பற்றி ஸ்ரீதேவி என்ன சொல்லுகிறார் என்பது தெரிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அவர் என்னை "சார்' என்றுதான் அழைப்பார். அவர் கொஞ்சமும் மாறவில்லை.
ஒருமுறை இயக்குநர் ஒருவரின் அறையில் அமர்ந்திருந்தேன். உங்கள் படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.
அடையார் பிலிம் இண்ஸ்டிடியூட்டில் படித்தவர் காரத்தே எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் என்றார். அவரது பெயரை கேட்டேன். மராத்தி பெயரை சொன்னார்கள். அவர்தான் ரஜினிகாந்த். எனக்கு ராஜன் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் குறுந்தாடி வைத்திருப்பார். ரஜினியும் அப்போது குறுந்தாடி வைத்திருப்பார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜன் அந்த பட ரிலீசுக்குப் பின் இறந்து விட்டார். உங்களுக்கு குறுந்தாடி நன்றாக இருக்கிறது எனப் பலர் சொல்லியும், ராஜன் நினைவு வருவதால் அதை ரஜினி எடுத்து விட்டார். இப்போது ராஜனைப் போல் ரஜினியும் என் நெருங்கிய நண்பராக இருக்கிறார். இது என் பாக்கியம்.''
கமலின் திரையுலக பொன்விழாவையொட்டி கேரள திரைத்துறை ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவுக்கான மீடியாக்கள் சந்திப்பில் இப்படி தன் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.