

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் "உருமி' படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்குகிறார். இதற்கிடையில் மீடியா வெளிச்சம் இல்லாமல் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு "மகரு மன்னே' என்ற பெயரில் மலையாளத்தில் உருவாகிறது. இயக்குநர் லெனின் ராஜேந்திரன் இயக்குகிறார்.
இதில் ரவிவர்மனாக நடித்துள்ளார் சந்தோஷ் சிவன். ரவிவர்மா வரைந்த முதல் ஓவியம் தமயந்தி. இந்த கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். சந்தோஷ் சிவனின் கனவு தேவதையாக நடிக்கிறார். ஏற்கனவே தமிழில் "வித்தகன்', "துரோகி' உள்ளிட்ட ஏழு படங்களில் நடித்து வரும் பூர்ணா, இந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
""ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனை ஹீரோவாக பார்த்ததில் ஆச்சரியம்தான். அவருக்கு நான் ஹீரோயின் என்பதில் பெருமையாக இருக்கிறது. நீண்ட வசனங்களை எந்த தடங்கலும் இல்லாமல் சந்தோஷ்சிவன் பேசியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் கொஞ்சம் அதிக கவனம் வைத்திருக்கிறேன் என்பது உண்மைதான்'' என்றார் பூர்ணா.
வீடியோ பரபரப்புகளுக்கு முன் ரஞ்சிதா நடித்த படம் "ஓடும் மேகங்களே'. இதில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார் ரஞ்சிதா. காதல் ஜோடிகளாக உதய், ரோஷிணி நடித்துள்ளனர். செழியன் இயக்கியுள்ளார். இணையதளம் மூலம் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பற்றி சொல்லும் கதையாம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.