புடவை கட்டிய படுகோனே!

தொடர்ந்து கிளாமராகவே நடித்து வந்த தீபிகா படுகோனே முதன் முதலாக படம் முழுவதும் புடவை அணிந்து நடிக்கிறார். "லகான்' படத்தை இயக்கிய அஷூதோஸ் கவரிகர் இப்படத்தை இயக்குகிறார். "கேஹ்லெங்கே ஜீ ஜான் சே' என்பது ப
புடவை கட்டிய படுகோனே!
Updated on
3 min read

தொடர்ந்து கிளாமராகவே நடித்து வந்த தீபிகா படுகோனே முதன் முதலாக படம் முழுவதும் புடவை அணிந்து நடிக்கிறார். "லகான்' படத்தை இயக்கிய அஷூதோஸ் கவரிகர் இப்படத்தை இயக்குகிறார். "கேஹ்லெங்கே ஜீ ஜான் சே' என்பது படத்தின் பெயர். தீபிகாவின் ஹீரோவாக நடிக்கிறார் அபிஷேக் பச்சன். தீபிகா முழுக்க முழுக்க புடவை அணிந்து நடிப்பதற்குக் காரணம் இருக்கிறது. 1940-களில் கதை நடக்கிறது. சுதந்திரப் போராட்ட கால வீராங்கனையாக நடிக்கிறார் தீபிகா. முதலில் இந்த வேடத்தில் நடிக்க அசினிடம்தான் பேசப்பட்டது. கேட்ட சம்பளம் கிடைக்காத காரணத்தால் படத்தை நிராகரித்து விட்டாராம் அசின். கிளாமரில் நடித்து வந்த தீபிகாவுக்கு கதையைக் கேட்டவுடன் பிடித்து விட்டதாம். சமீபத்தில் வழக்கமான சினிமாக்களிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என அவர் அளித்த பேட்டியும் இதற்கு காரணம் என்கிறார்கள்.

களரி கற்கிறார் ஆர்யா!

"சித்திரம் பேசுதடி', "அஞ்சாதே' படங்களுக்குப் பின் "நந்தலாலா' படத்தை இயக்கினார் மிஷ்கின். தற்போது சேரன் நடிக்கும் "யுத்தம் செய்' படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ""என்னுடைய ஒவ்வொரு படமும் வித்தியாசமான களத்தைக் கொண்டு உருவாகி வருகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அதிக சிரத்தை எடுத்து அதை உயிரோட்டமாக எடுத்து வருகிறேன். அதனால் என் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே கதைக் களம் அமைத்து வருகிறேன். சமீபத்தில் ஆர்யாவின் படங்கள் என்னை மிகவும் கவர்ந்து வருகின்றன. அதனால் அவரிடம் ஒரு படம் செய்யலாம் என்றேன். அதுக்குத்தான் காத்திருக்கிறேன் என்று ஆர்வமாகி விட்டார். ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக களரி சண்டை  கற்று வருகிறார் ஆர்யா. இதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். "யுத்தம் செய்' இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது'' என்றார் மிஷ்கின்.

மலைக்க வைத்த காதல்!

"காதலை காதலிக்கிறேன்' படத்தின் மூலம் இசையமைத்து கதாநாயகனாக கலைச்செல்வன் என்பவர் அறிமுகமாகிறார். டினு, அஞ்சலி ஜோயி, நியா ரோஸ் ஆகிய மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். பல புதுமுகங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீதர். படத்தின் கதைக் கரு குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, ""காதலர்களான இரண்டு என்ஜினியர்கள் அணைக்கட்டு கட்டுவதற்கான பணிகளை திட்டமிட மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாத ஒரு மலைக் கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கே வாழ்ந்த ஒரு டீச்சரைப் பற்றியும், அவருக்கும் ஒரு ஆராய்ச்சியளருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான காதலைப் பற்றி கேள்விப்பட்டு, அவர்களைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் எப்படிப்பட்டது? என்பதுதான் படத்தின் கதை. முழுப் படப்பிடிப்பும் ஆனைமுடி மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விஷ பாம்புகள் நிறைந்த அந்த ஊரில் கரடிகளும், புலிகளும் நடமாடிய கால் தடங்களைக் கண்டு படப்பிடிப்பு குழுவினர் பயந்தனர். இருப்பினும் பல சிரமங்களுக்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது'' என்றார்.

கடைசி வரை இருப்பது காதல்தான்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் "எங்கள் காதல்' படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவி என்பவர் இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ""இப்படத்தின் மூலம் வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் மைத்துனர் சந்துரு என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் உதய், ஆதர்ஷ் என்பவர்களும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஆந்திரத்தைச் சேர்ந்த பிரதிஷ்டா, கீர்த்தி, பிரியா நாயுடு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பொன்னம்பலம், "காதல்' தண்டபாணி, மனோபாலா உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்கள் ஏற்கிறார்கள். காதல்தான் கரு. மூன்று ஜோடிகளுக்கிடையான காதலை வித்தியாசமான முறையில் இணைத்து கதைச் சொல்லப் போகிறேன். அனைவரையும் கவருகின்ற விதத்தில் இந்தப் படம் வந்திருக்கிறது. ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. உண்மையான காதலர்கள் வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து வாழ்ந்தாலும் அல்லது இறந்து போனாலும், என்றும் மறக்க முடியாத அளவில் அவர்களின் வாழ்க்கையின் கடைசி காலம் வரையிலும் நினைவில் நீங்காமல் இருப்பது காதல் மட்டும்தான் என்ற கருத்தை விளக்கும் விதமாக கதை அமைந்திருக்கிறது'' என்றார்.

திரிஷாவுக்குப் பதிலாக எமி?

கடந்த சில மாதங்களுக்கு முன் "விண்ணைத்தாண்டி வருவாயா' ஹிந்தி பதிப்பின் படப்பிடிப்பைத் தொடங்கினார் கௌதம் வாசுதேவ்மேனன். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள பிரதீக் பப்பர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா ஒப்பந்தமானார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது. கால்ஷீட் பிரச்னையை காரணம் காட்டி படத்திலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் திரிஷா. இதனால் திரிஷா மீது கடுங்கோபம் கொண்ட கௌதம் வாசுதேவ்மேனன் படப்பிடிப்பை நிறுத்தினார். இருப்பினும் திட்டமிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என கௌதம் தரப்பு படக்குழுக்கு தீர்மானித்துள்ளது. திரிஷாவுக்கான மாற்று நபரை கதாநாயகியாக்க கௌதம் தரப்பு தற்போது நடிகை தேர்வில் ஆர்வம் காட்டி வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட நடிகைகளை போட்டோ ஷூட் செய்தும் கௌதமுக்கு திருப்தி இல்லை. மதராசப்பட்டிணத்தில் நடித்த எமி ஜாக்சனுக்கு நாயகி வாய்ப்பு கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால் இதுவரை எமி ஜாக்சனிடம் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிகிறது. தற்போது அந்த வாய்ப்பு சமந்தாவுக்கு செல்லலாம் என பேசப்பட்டு வருகிறது.

அனுசரித்துப் போகிறார் அனுஷ்கா!

ஹரி இயக்கத்தில் வெளிவந்த "சிங்கம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அதிக வாய்ப்பு அனுஷ்காவை தேடி வந்த வண்ணம் உள்ளது. சிம்பு ஜோடியாக "வானம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். "மதராசப்பட்டிணம்' விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதைத் தவிர தெலுங்கு படவுலகிலும் நிறைய வாய்ப்புகள் அனுஷ்காவை தேடி வந்த வண்ணம் உள்ளது. மகேஷ்பாபுடன் நடித்து சமீபத்தில் வெளிவந்த "கலீஜா' சரியாக போகாததால் சற்று வருத்ததில் உள்ளார் அனுஷ்கா. தெலுங்கில் முதல் இடம் என்ற அந்தஸ்த்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு இந்தப் படம் சற்று சறுக்கலை எற்படுத்தி உள்ளது. இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் இலியானா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் இடத்துக்குப் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் தெலுங்கில் கிடைத்திருக்கிற முதல் இட வாய்ப்பை விட்டுவிட மனம் இல்லாமல் தெலுங்கு சினிமாக்களிலே கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் அனுஷ்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com