ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மது, சிகரெட்டை நிறுத்திவிடலாம்!

நான் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவது, சிகரெட் பிடிப்பது, கண்டதையும் ஓட்டல்களில் சாப்பிடுவது, ரெüடித்தனமாகப் பேசுவது, செயல்களில் ஈடுபடுவது என்றெல்லாம் பழகிவிட்டேன். ஆனால் அவை தவறு என்பதை தற்ச
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மது, சிகரெட்டை நிறுத்திவிடலாம்!
Updated on
2 min read

நான் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவது, சிகரெட் பிடிப்பது, கண்டதையும் ஓட்டல்களில் சாப்பிடுவது, ரெüடித்தனமாகப் பேசுவது, செயல்களில் ஈடுபடுவது என்றெல்லாம் பழகிவிட்டேன். ஆனால் அவை தவறு என்பதை தற்சமயம் உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்கிறேன். ஆனால் முடியவில்லை. நான் திருந்தி வாழ ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

கோவிந்தராஜ்,

வில்லிவாக்கம்.

தீய நண்பர்களின் சேர்க்கை தோஷத்தினால் உடம்புக்கும், உள்ளத்துக்கும், பொருளுக்கும் கெடுதியையும் அழிவையும் உண்டு பண்ணும் தீய பழக்கங்கள் சிலகாலம் தொடர்ந்து பழக்கப்பட்டதாக ஆகிவிட்டால் அவற்றை எப்படியும் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தை ஒரு காலத்தில் ஏற்படுவது அறிவுள்ளவருக்கு இயல்பே.

தனிப்பட்ட முறையிலே எந்தக் காலத்திலும் எல்லாருக்கும் எந்தக் குறைந்த அளவிலும் தீமையையே விளைவிக்கும் பதார்த்தங்கள், மதுவகைகள், புகையிலை சேரும் பீடி, சிகரெட்டுகள், அபின், கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகள் - இவற்றின் சுபாவ (இயற்கை) சக்திகள் அபரிமிதமானவை, அலாதிப்பட்டவை. இவற்றை உபயோகிக்கத் துவங்கியதும், அளவில் குறைவாக இருந்தாலும் அவற்றின் துர்குணம், கெடுதி அந்த அளவிற்கு ஏற்றபடி நிச்சயமாய் ஏற்படுகின்றன. ஆரம்பித்த சில தினங்களில் உடம்பில் சுறுசுறுப்பு, ஜீரண சக்திகள் வளருவது போன்ற போலி குணங்கள் உண்டான போதிலும், அவை நிலைத்ததாக இருப்பதில்லை. மதுவின் அளவும் கூடிவிடும். கூடாவிட்டால் உடம்பிலும் குடலிலும் மூளையிலும் முன்பிருந்த சுறுசுறுப்பு வரவரக் குறையும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அதிக அளவு உபயோகித்தாலும் சுறுசுறுப்பு எதுவும் ஏற்படுவதில்லை. மாறாக பலவிதமான தளர்ச்சிகள், பலவிதமான உபாதைகளும் உண்டாகும். நிறுத்தினாலோ கை,கால்கள் உதறும். நிறுத்தாவிட்டலோ அபாயம் அதிகம். இப்படி ஓர் இரண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

நீங்கள் ஒரு நல்ல பிள்ளையாக மாற நினைப்பதே பெரிய விஷயம்தான். அதற்காக தடாலடியாக மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டாம். ஏனென்றால் அதுவும் தொந்தரவு தரும். நண்பர்களைத் தவிர்த்து வீட்டில் தனியாக மதுவைச் சாப்பிடும்போது, 100 சதவீதம் மதுவில் இரண்டு சதவீதம் குறைத்து, அந்த அளவிற்கு நற்குணங் கொண்ட ஆயுர்வேத ஆஸவ மருந்தாகிய ஸ்ரீகண்டாஸவமோ, அரிஸ்ட மருந்தாகிய திராக்ஷாரிஷமோ ஆகியவற்றில் ஒன்றை மதுவிற்குப் பதிலாகச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பிறகு நாளுக்கு நாள் மதுவின் அளவை 2 % மேலும் மேலும் குறைத்துக் கொண்டே வர வேண்டும். குறைக்கும் அளவிற்கு நல்ல ஆஸவாரிஸ்ட மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடவும். இப்படியாக நாளடைவில் மதுவின் அளவைக் குறைத்து நல்ல மருந்தின் அளவை சிறிது சிறிதாக அதிகப்படுத்திக் கொண்டே போனால், இறுதியில் மதுபானம் முற்றிலும் ஒழிந்து, அந்த அளவிற்கு ஆயுர்வேத மருந்தின் பானம் வந்துவிடும். இதனால் உடல் உபாதை ஒன்றும் வராது. மதுபானத்தின் மீதுள்ள நாட்டமும் குறைந்துவிடும். இந்த ஆஸவம் அல்லது அரிஸ்ட மருந்தையும் ஒரே நாளில் அறவே விட்டுவிடலாம்.

நீங்கள் சிகரெட்டில் உள்ள புகையிலையை 1% குறைத்து, அந்த இடத்தில் தூபவர்த்திகள் எனப்படும் நல்ல குணமுள்ள மூலிகைச் சரக்குகளை வைத்து சிகரெட் தயாரித்து அதை உபயோகிக்கவும். இப்படித் தினந்தோறும் 1 % வீதம் புகையிலையைக் கூடுதலாகச் சிகரெட்டில் குறைத்து, நல்ல தூபவர்த்தியைக் கூட்டிக் கொண்டே வர, முடிவில் ஒருநாளில் சிகரெட், பீடியில் உள்ள புகையிலை சூன்யமாகிவிடும். மறுநாளே ஆயுர்வேத தூபவர்த்திகளை நிறுத்திவிடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com