

"யுத்தம் செய்' படத்தில் வரும் ""கன்னித்தீவு பொண்ணா... கட்டெறும்பு கண்ணா...'' பாடலின் மூலம் இசையமைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பாடகர் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன். இசைத்துறை அனுபவம் குறித்து அவரிடம் பேசிய போது, ""மூன்று வயதிலேயே இசை ஆர்வம் வந்து விட்டது. பள்ளி வாழ்க்கை என் இசைக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
பின் 19 வயதில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திடம் கோரஸ் பாடகராகச் சேர்ந்தேன். அப்படியே சினிமா ஆசை, இசை ஆர்வம் தொடர ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வந்த "கச்சேரி ஆரம்பம்' படத்தில் வாய்ப்பு தந்தார் இசையமைப்பாளர் டி.இமான். ""வாடா வாடா பையா...'' என்ற பாடல் திரை வாழ்க்கையை செம்மையாக தொடங்கி வைத்தது. முதல் பாடலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததில் மகிழ்ச்சி. பின் "அசல்', "நந்தி', "இரண்டு முகம்', "வாடா', "தம்பிக்கோட்டை' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளேன்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் "யுத்தம் செய்' படத்தில் வந்த ""கன்னித்தீவு பொண்ணா....'' பாடல் வாய்ப்பை தந்தார் மிஷ்கின். பாடி முடித்ததுமே இந்த ஆண்டின் ஹிட் பாடலைப் பாடியதற்கு வாழ்த்துகள் என்றார் மிஷ்கின். அவர் சொன்னது போலவே பாடலுக்குப் பெரும் வரவேற்பு. இசையமைப்பாளர்களும், நடிகர்களும் இந்தப் பாடலை வெகுவாகப் பாராட்டினார்கள். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள். முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் பாட வாய்ப்புகள் வந்திருக்கின்றன'' என்றார் எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.