திரைக்கதிர்: விக்ரம் பாராட்டிய மைனா!

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "தெய்வமகன்' படத்தில் அனுஷ்கா, அமலாபால் என இரு ஹீரோயின்கள். விக்ரம் மற்றும் அனுஷ்காவுடன் நடிப்பது குறித்து அமலா பால் கூறியது, ""விக்ரம் எனக்கு பிடித்த நடிகர். அவருடன
திரைக்கதிர்: விக்ரம் பாராட்டிய மைனா!
Updated on
3 min read

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் "தெய்வமகன்' படத்தில் அனுஷ்கா, அமலாபால் என இரு ஹீரோயின்கள். விக்ரம் மற்றும் அனுஷ்காவுடன் நடிப்பது குறித்து அமலா பால் கூறியது, ""விக்ரம் எனக்கு பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கும். அனுஷ்கா திறமையான நடிகை. தற்போதைய இந்திய சினிமாவில் முக்கியமானவர். அவருடன் நடிப்பது குறித்து பலர் கேட்கிறார்கள். நான் எல்லோரிடமும் எளிதாகப் பழகி விடுவேன். அதே போல் எனக்கு தோழிகளும் அதிகம். அதே மாதிரிதான் சமீபத்தில் அனுஷ்காவும். தெய்வ மகன் படக் குழு வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டேன். விக்ரம் "மைனா'வை வெகுவாக பாராட்டினார். அனுஷ்கா "மைனா' இன்னும் நான் பார்க்கவில்லை விரைவில் பார்த்து விடுவதாக சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார் அமலாபால்.

சென்னை தாதா மதுரை நாயகன்

தெலுங்கில் வெளியான "ரகடா' தமிழில் "வம்பு' என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. கதாநாயகனாக நாகார்ஜூனா, அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரதீப் ராவத், கோட்டா சீனிவாசராவ், அவினாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குநர் வீறுபோட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ""சென்னையின் மிகப் பெரிய தாதாவை மதுரையில் இருந்து வந்திறங்கும் கதாநாயகன் எப்படி வீழ்த்துகிறான் என்பதுதான் கதை. ஆக்ஷன் காட்சிகள் புதுமையானதாக வந்துள்ளன. நாகார்ஜூனா நடித்த ஆக்ஷன் படங்களிலேயே இது முற்றிலும் வேறுபட்டது. தெலுங்கில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன், கிளாமர் என அனைத்து வகையிலும் படத்தில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. அதே போல் இந்தப் படமும் பெரிய வசூலை அள்ளும். நாகார்ஜூனாவின் படம் நீண்ட நாளைக்குப் பின் தமிழில் டப் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீசைப் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் நாகார்ஜூனா'' என்றார் இயக்குநர் வீறுபோட்லா.



இயற்கை தந்த இடர்ப்பாடு

ஜி.ஏ.ஜெ. சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மையம் கொண்டேன்.' கதாநாயகனாக திலிப்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா நாயுடு அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகியாக பவீனா நடிக்கிறார். ராதாரவி, கஞ்சா கருப்பு, வின்சென்ட் அசோகன், ரியாஸ்கான், கோட்டா சீனிவாசராவ், நீபா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அர்ஜுனராஜா. கதைக்களம் குறித்து இயக்குநர் கூறியது:

""கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படத்தின் முழு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மலையும் அதை ஒட்டிய நீர் சார்ந்த பகுதிகளும்தான் கதைக்களம். காதல்தான் கரு. காதலுக்குப் பல எதிர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்தக் காதல் சமுதாயத்தின் வேறுபட்ட பிரச்னையைச் சந்திக்கிறது. அந்தப் பிரச்னையின் முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்து ஜனரஞ்சகமான படமாக இது உருவாகி வருகிறது. ராஜபாளையம் ஒட்டிய வனப்பகுதிகளில் நடந்த படப்பிடிப்பின்போது மிகவும் சிரமம் இருந்தது. இயற்கைச் சூழலில் நீண்ட நாளைக்குப் பின் வரும் படமாக இந்தப் படம் இருக்கும்'' என்றார் அர்ஜூனராஜா.



பள்ளி அனுபவங்களைச் சொல்லும் படம்

சந்துரு, ஹாசினி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் "அரும்பு மீசை குறும்புபார்வை.' பாரதிராஜாவின் மாணவர் வெற்றிவீரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

""கேர் ஆஃப் ஃபுட் பாத்' என்ற கன்னட படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கிறேன். "கண்ணீர்', "பென்சில்' என்ற இரண்டு குறும்படங்களையும் இயக்கியுள்ளேன். "பென்சில்' திரைப்படம் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் நடத்திய குறும்பட விழாவில் இரண்டாம் பரிசைப் பெற்றது. கிராமத்துப் பின்னணியில் இருக்கும் பள்ளியையும், மாணவர்கள் தங்கும் விடுதியையும் இப்படத்தில் கதைக் களமாக்கி நாம் கடந்து வந்த பள்ளிக் கால ஞாபகங்களைக் காட்சிகளாக்கி இருக்கிறேன். ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர்களைத் தேர்வு செய்து மிகவும் யதார்த்தமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஜூன் முதல் மே வரை பள்ளியில் நடைபெறும் மாணவர்களின் கேலி, கிண்டல், சந்தோஷம், காதல், சோகம் என அத்தனை உணர்வுகளும் ரசிக்கும்வகையில் சொல்லப்பட்டிருக்கின்றன. சின்ன வயதிலே ஊரை விட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் நிலை இதில் முழு அளவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை வந்த பள்ளி கால அனுபவங்களைச் சொல்லிய படங்களிலிருந்து இந்தப் படம் தனித்து நிற்கும்'' என்றார் இயக்குநர் வெற்றிவீரன்.

நடிகர் திலகத்தின் ஆசை

"தூங்கா நகரம்' படத்தில் நடித்திருக்கிறார் சென்னை கமலா திரையரங்க அதிபர் வி.என். சிதம்பரம். ""கமலா திரையரங்கம் கட்டிய காலத்தில் சென்னை நகரில் கட்டப்பட்ட பல திரையரங்குகள் இன்று இல்லை. அதிநவீன வசதிகளுடன் புதுப்பித்து நான் நேசித்து வந்த தொழிலை இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன். மதுரையை விட்டு சென்னைக்குப் பஸ் ஏறும் போதே திரையரங்கைத் தவிர சினிமா சம்பந்தபட்ட வேறு எதிலும் நான் ஈடுபாடு காட்டப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். "தூங்கா நகரம்' படத்தின் இயக்குநர் கௌரவ்வின் தந்தை எனக்கு நண்பர் என்பதால் என்னை எளிதில் கதை சொல்லி கவர்ந்து விட்டார் கௌரவ். தயாநிதி அழகிரி தயாரிப்பாளர் என்பதால் நானும் ஒப்புக் கொண்டேன். படப்பிடிப்புத் தளம், நடிகர்கள் என எல்லாமும் எனக்கு அந்நியம் இல்லை. சிவாஜி கணேசனுடன் பல படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதே சிவாஜி என்னை நடிக்க அழைப்பார். அவருக்கு என்னை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் அழைக்கும்போதெல்லாம் எதையுமே சொல்லாமல் மௌனமாக இருந்து விடுவேன். இப்போது என் முகத்தை என் திரையரங்கில் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவார். நான் சினிமாவில் நடித்ததன் மூலம் சிவாஜியின் ஆசை நிறைவேறி இருக்கிறது. தொடரும் வாய்ப்புகள் குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கவனம் கவரும் கேரக்டர் வந்தால் பார்க்கலாம்'' என்கிறார் வி.என்.சிதம்பரம்.

ஒரு பாடலுக்கு ஆடத் தயார்

ஏவிஎம் நிறுவனத்தின் 175-வது படமாக உருவாகி வருகிறது "முதல் இடம்'. புதுமுக இயக்குநர் குமரன் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்காக நாயகன் விதார்த்துடன் கீர்த்தி சாவ்லா நடனம் ஆடிய ""ஊரு ஊரு தஞ்சாவூரு.....'' என்ற பாடல் தஞ்சை நகர வீதிகளில் படமாக்கப்பட்டது. ஒரு பாடலுக்கு ஆடிய அனுபவம் குறித்து கேட்க கீர்த்தி சாவ்லாவை தொடர்பு கொண்டால், ""ஒரு பாடலில் ஆடுவது எனக்குப் புதிதல்ல. ஆசியாவின் பெரிய சினிமா நிறுவனமான ஏவிஎம் என்பதால் ஒப்புக் கொண்டேன். பாடல் வித்தியாசமான முறையில் படமாகியுள்ளது. நடன அசைவுகளும் புதிதாக இருக்கும். ஹீரோயினாக நடித்து வரும் "திருமதி தமிழ்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இது தவிர எஸ்.வி.சேகர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆடுவேன்'' என்றார் கீர்த்தி சாவ்லா.







 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com