திரைக்கதிர்: சில்லென்று இன்னொரு காதல் கதை!

புதுமுகம் தீபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் "மழைக்காலம்'. கதாநாயகனாக கூத்துப்பட்டறை மாணவர் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். "பேராண்மை' சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் ம
திரைக்கதிர்: சில்லென்று இன்னொரு காதல் கதை!
Updated on
3 min read

புதுமுகம் தீபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் "மழைக்காலம்'. கதாநாயகனாக கூத்துப்பட்டறை மாணவர் ஸ்ரீராம் அறிமுகமாகிறார். "பேராண்மை' சரண்யா கதாநாயகியாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். படம் குறித்து இயக்குநர் கூறியது, ""குளிர்ச்சியை குறிக்கவே மழைக்காலம் எனப் பெயர் வைத்தேன். மழை தரும் சிலிர்ப்பு, சந்தோஷத்தைப் போல்தான் இந்தக் கதையும். அழகான நட்பும் காதலும் கொண்ட காதலன், காதலி. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தது போல் பொருத்தம். ஒருவரை தவிர்த்து இன்னொருவர் உயிர் வாழ்தல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு இறுக்கம். இருந்தாலும் அவர்களுக்கு ஒரு வருத்தம். அது என்ன என்பதற்கான பதில்தான் கிளைமாக்ஸ். நாயகன் திரையரங்க உரிமையாளர் மகன். நாயகி ஓவியக் கல்லூரி மாணவி. இருவருக்குள்ளும் நடக்கும் சம்பவங்களே கதை. பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாள இசையமைப்பாளர் ஜான்சன் இசையமைக்கிறார். கடைசி 12 நிமிடங்கள் வசனம் இல்லாமல் வெறும் இசையை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம். மழைக்காலம் கதையின் ஈரம் எல்லோரது இதயத்திலும் இறங்கும்'' என்றார் இயக்குநர் தீபன்.

 ஒரு நடிகை நாடகம் பார்த்தபோது...

 "தீராத விளையாட்டு பிள்ளை', "யாவரும் நலம்' படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இப்போது அமீர் இயக்கும் "ஆதிபகவன்' படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்து வருகிறார். ஹிந்தி நடிகர் ரன்தீப் ஹோடாவுக்கும், நீது சந்திராவுக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது, ஒரு மேடை நாடகத்தில். ரன்தீப் சமீபத்தில் நடித்த நாடகத்தைப் பார்க்க வந்தார் நீது. நாடகம் தொடங்குவதற்கு முன்னும், முடிந்த பின்னும் இருவரும் ஒன்றாக கைகோர்த்தபடி வந்தனர். இது குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பியதும் ஓரிரு நாள்கள் காத்திருங்கள் பதில் சொல்கிறோம் என்றனர். சமீபத்தில் நீதுவின் பெற்றோரை சந்தித்து நீதுவை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரன்தீப். இருவரின் பெற்றோர்கள் சம்மதிக்கவே நீதுவின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என தெரிகிறது.

 மீண்டும் தாராவியில்!

 ""விளையாடு மங்காத்தா....'' எனத் தொடங்கும் "மங்காத்தா'வின் பாடல் வெளியிடப்பட்டிருக்கறது. கங்கை அமரன் எழுத, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் பேசினால், ""இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக ""விளையாடு மங்காத்தா....'' பாடல் இருக்கும் என்பது நிச்சயம். அஜித்தின் 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்படத்துக்கு கடின உழைப்பை அளித்திருக்கிறார் அஜித். ஒரே ஒரு பாடல்தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் அனைத்து பாடல்களும் வெளியாகும். ""விளையாடு மங்காத்தா..'' பாடல் அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு யுவன்ஷங்கர்ராஜாதான் காரணம். அஜித்துடன் யுவன் இணைந்த "தீனா', "பில்லா' என இரு படங்களுமே ஹிட். இப்போது இந்தப் படம். நிச்சயம் வெற்றியடையக் காத்திருக்கிறது. மும்பையின் தாராவி பகுதியில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம். "நாயகன்' படத்துக்குப் பின் தாராவி பகுதியில் படமாக்கப்பட்ட தமிழ்ப் படமாக "மங்காத்தா' இருக்கும். அர்ஜுன், திரிஷா, அஞ்சலி, லட்சுமிராய் என நம்பிக்கையான நட்சத்திரங்கள். எல்லோருக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது'' என்றார் வெங்கட்பிரபு.

 காவ்யாவுக்குக் கிடைத்த விருது!

 "கத்தம்மா' படத்துக்காக கேரள அரசின் விருதை பெற்றிருக்கிறார் காவ்யா மாதவன்.

 ""கேரள மாநில அரசின் விருதை நான் எதிர்பார்க்கவில்லை. விருது அறிவிப்பு வந்ததும், பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். "கத்தம்மா' படத்துக்கு விருது கிடைக்கும் என நினைத்தேன். எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம், படத்தின் இயக்குநர் கமல்தான். அவர் என்னை நம்பினார். அந்த நம்பிக்கை இப்போது வீண் போகவில்லை. இந்த விருதுக்கு காரணமானவர்கள் அனைவருக்கும் நன்றி. விவாகரத்துக்குப் பிரச்னைகளுக்குப் பின், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அதிலிருந்து விடுபடவே மீண்டும் சினிமாவுக்கு வந்தேன். எனக்கு ஏற்றாற்போல் கதைகளும், கேரக்டர்களும் வந்தன. நிலைக்கு ஏற்றவாறு என்னைத் தேர்வு செய்த இயக்குநர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களும் என்னை பெரிதும் ஆதரித்தார்கள். இப்போது நான் அடைந்திருக்கும் நிலைக்கு அவர்கள்தான் காரணம். இனி அவர்கள் எதிர்பார்ப்பதை போலவே நடிப்பேன். தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. பட வாய்ப்புகள் வந்தன. நான்தான் அது குறித்து யோசிக்கவில்லை'' என்றார் காவ்யாமாதவன்.

 ரீமா?... திருமணமா?

 "மின்னலே', "கிரி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரீமாசென். செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பின், தமிழ்ப் பட வாய்ப்புகளைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். அதற்கு மாறாக அறிமுக இயக்குநர்கள் கூட அவரை தேர்வு செய்யவில்லை. இதனால் ரீமாசென் தங்கியிருந்த சென்னை அண்ணா நகர் வாடகை பங்களா காலியாக உள்ளது. பாலிவுட் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து மும்பைக்கு சென்றவருக்கும் உடனை வாய்ப்புகள் இல்லை. ஓரிரு படங்கள் வந்த போதிலும், அதையும விடாமல் நடித்தார். இந்நிலையில் ஹிந்தியின் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க ரீமாசென்னுக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பும் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், ரீமாசென்னுக்கு திருமணம் என செய்திகள் வர, பலர் அவருக்கு போன் செய்து விசாரித்து வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனமும் திருமணம் குறித்து விசாரித்திருக்கிறது. ரீமா எவ்வளவு சொல்லியும் கேளாமல் படப்பிடிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரீமாவுக்கு பதில் இன்னொரு ஹீரோயினை தேடும் வேலையிலும் அந்நிறுவனம் இறங்கியிருக்கிறதாம். இதனால் ரீமாவின் பாலிவுட் கனவும் தகர்ந்திருக்கிறது.

 நடிகைகளுக்குள் மோதல் வந்தால்?

 இரண்டு முன்னணி ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது போட்டி என்பது சகஜம். சில நேரம் அது மோதலாக மாறிவிடுகிறது. ஹிந்தியில் அனுராக்பாசு இயக்கும் "பார்பி' படத்துக்கு பிரியங்கா சோப்ரா, இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதல் கட்டப் படப்பிடிப்பு சுமுகமாக முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இருவருக்கும் மோதல் உருவாகி உள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு மனநிலை பாதித்தவர் வேடம். இலியானாவுக்கு கிளாமர் வேடம். கதையை கேட்ட பின்னரே இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டனர். இருந்த போதிலும் பிரச்னை எழுந்துள்ளது. ""கிளாமர் வேடங்களில் நான் ஏற்கனவே பளிச்சிட்டுவிட்டேன். இனி நடிப்புதான் முக்கியம். கதையின் நகர்வில் என் நடிப்புக்கு முக்கியத்துவம் வேண்டும். பிரியங்காவுக்கு மட்டும் நடிக்க ஸ்கோப் இருக்கிறது. விருதுகள் பெறும் அளவுக்கு அவருக்கு கேரக்டர் வந்திருக்கிறது. எனக்கும் அது மாதிரி வேண்டும்'' என கேட்டிருக்கிறார் இலியானா. இதையறிந்த பிரியங்கா தனக்கும் கூடுதல் காட்சிகள் வேண்டும் என குரல் உயர்த்தி இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்பை நிறுத்தியதற்கு இயக்குநர்தான் காரணம். நடிகைகளின் மோதல் காரணமல்ல என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com