

எனது வயது 40. 2010 நவம்பரில் அப்பன்டிûஸட்டிஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது மூன்று மாதங்களாக வயிற்று வலி உள்ளது. பெருங்குடல் சிறுகுடல் சேருமிடத்தில் இரண்டும் சேர்ந்துள்ளது என்றும் வீக்கமும் உள்ளது என்று மருத்துவர் கூறி இதற்கு மருத்துவமில்லை என்றும் கூறுகிறார். இதற்கு ஏதாவது மருத்துவமிருக்கிறதா?
-கே.எஸ். கோலப்பதாஸ், கட்டையன்விளை, நாகர்கோவில்.
நீங்கள் கடிதத்துடன் இணைத்துள்ள CT ABDOMEN SCAN REPORT - இல் கல்லீரல் வீக்கம், சிறுநீரை தடைப்படுத்தாத வலது சிறுநீரகத்தில் கல், வயிற்றின் உள்பகுதியை பாதுகாக்கும் ஜவ்வுப்பகுதியில் தடிப்பு, வயிற்றின் வலது ILIAC FOSSA எனும் பகுதியில் சிறுகுடல் பகுதிகள் ஒட்டியிருத்தல் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றில் எந்த உபாதை உங்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்துகிறது என்ற ஒரு கேள்வி எழுகிறது. ஏதேனும் ஒரு உபாதையினாலா? அல்லது எல்லாம் ஒன்றுசேர்ந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றனவா? என்பது சட்டென்று விளங்காத வகையில் இருக்கின்றன.
குடல் பகுதியில் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் "ஸமானன்' என்ற வாயு கேடுற்று, இந்த உபாதைகளை ஊதிப் பெரிதாக்கியதா? என்ற ஒரு சந்தேகமும் உள்ளது. இதில் எந்த உபாதைக்கு முதலில் வைத்தியம் செய்வது? அப்படிச் செய்வதானால் மற்ற உபாதைகள் பெரிதாகாதவாறு கவனிக்க வேண்டும். கல்லீரல் வீக்கம் குறைய வேண்டும். சிறுநீரகக் கல் உருகி வெளியேற வேண்டும், ஜவ்வுப் பகுதியிலுள்ள தடிப்பைக் குறைக்க வேண்டும், சிறுகுடல் ஒட்டு பிரிய வேண்டும் போன்ற பல வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடிய மருந்து தேவை. பொதுவாகவே குடல் பகுதியின் சிறப்பான செயலாற்றலை மேம்படுத்தக்கூடிய உணவின் வகைகளில் கறிவேப்பிலை சிறந்தது. குடலில் ஏற்படும் வீக்கம், தடிப்பு, வலி போன்றவற்றைக் கறிவேப்பிலைத் துவையல் சாதம் நீக்கி விடும் திறன் கொண்டது. குளிர்ச்சியான வீர்யமுடையதால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உபாதையைப் போக்கும். குடலில் தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும். மூலத்திற்கு நல்ல ஓர் உணவுப்பொருள். குடலில் ஏற்படும் விஷப் பாதிப்புகளை அகற்றும் என்று நிகண்டு ரத்னாகரம் எனும் நூல் கூறுகிறது. அதனால் நீங்கள் காலை உணவாக, வெதுவெதுப்பான புழுங்கலரிசி சாதத்தில் கறிவேப்பிலைத் துவையல் நல்லெண்ணெய்யுடன் விட்டுப் பிசைந்து, சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை அரிந்து, கடுகு தாளித்த தயிர் பச்சடியில் சேர்த்து தோய்த்துச் சாப்பிடவும். கறிவேப்பிலையை முக்கிய உள்மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் "காளசாகாதி' கஷாயமும் நீங்கள் சாப்பிட வேண்டிய நல்ல மருந்தாகும்.
பாகலிலை, பாகற்காய், வேப்பிலை, வேப்பம்பூ, வெந்தயக்கீரை, நாவல் இலை, கோவைக்காய் முதலிய கசப்பும் துவர்ப்பும் மிக்க இலைகளையும் காய்களையும் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கல்லீரல் வீக்கம், ஜவ்வு தடிப்பு, சிறுகுடல் ஒட்டியிருத்தல் போன்ற உபாதைகள் குறைந்து விடும். இலைகளைத் துவையலாகவும் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறாகவும் பயன்படுத்தலாம். காய்களை வதக்கிச் சாப்பிடலாம். வாழைத்தண்டு பொரியல் அடிக்கடி சாப்பிட, சிறுநீரகக் கல் விரைவில் உருகி, வெளியே வந்துவிடும்.
வெறும் தண்ணீரைக் குடிப்பதைவிட உங்களுக்குச் சீரகம் ஓமம் போட்டுக் காய்ச்சிய தண்ணீர் குடிப்பது நல்லது. சீரகம் 10 கிராம், ஓமம் 5 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர் ஆனதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் ஒரு நாளில் பலமுறை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தவும். குடல் இழந்துள்ள சக்தியை மீட்டும் தரும் குடிநீராக இது பயன்படும்.
ஜீரக வில்வாதி லேஹ்யம், அஷ்ட சூரணம், தசமூலாரிஷ்டம் போன்ற மருந்துகளால் குடல்வயிற்றுப் பகுதிகளில் கிருமிகளின் சேர்க்கை அதிகம் உங்களுக்கு ஏற்படாதவாறு பாதுகாக்கும். உங்களுக்குள்ள நஇஅச தஉடஞதப காணும்போது குடலில் உணவு சீரான வேகத்துடன் நகரும் தறுவாயில் குமுறலுடன், படபடப்புடன், சத்தத்துடன் நகர வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவுச் சத்து முழு அளவு ஏற்கப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவற்றை இம் மருந்துகள் தவிர்க்கக் கூடியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.