டி.டி.எச்.-ல் படம் பார்ப்பது எப்படி?

புதிய தமிழ்த் திரைப்படங்கள் டி.டி.எச். மூலம் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு தரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.டி.எச்.-ல் படம் பார்ப்பது எப்படி?
Updated on
2 min read

புதிய தமிழ்த் திரைப்படங்கள் டி.டி.எச். மூலம் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு தரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.டி.எச். இணைப்பு வைத்திருப்பவர்கள், புதிய திரைப்படங்களை காண விரும்பினால் அதனை எவ்வாறு காண முடியும் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சுமார் 50 லட்சம் டி.டி.எச் இணைப்புகள் உள்ளன.
 இது குறித்து யூடிவி நிறுவனத்தின் தென்னிந்திய செயல் அதிகாரி தனஞ்செயன் கூறியது:
 ""கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்குகென்று எப்படி ஒரு குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளதோ, அதே போன்று டி.டி.எச் ஆபரேட்டர்களுக்கும் பிரத்யேக குறியீட்டு எண் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் டி.டி.எச்.ல் திரைப்படத்தை ஒளிபரப்புவார்கள்.
 வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, செல்போன்களைப் போன்று டி.டி.எச்.-ல் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன.
 ப்ரீபெய்டு திட்டம் வைத்திருக்கும் டி.டி.எச். வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படத்தை காண ஓர் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் இருந்தால் அந்த திரைப்படத்திற்கான கட்டணம் தானாக டெபிட் செய்யப்படும். திரைப்படத்துக்கான கட்டணம் அவர்கள் கணக்கில் இல்லாவிட்டால் திரைப்படத்தை காண முடியாது.
 போஸ்ட்பெய்ட் டி.டி.எச். இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் இதே போன்று எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். ஆனால் கட்டணத்தைப் பொருத்தவரை மாதாந்திர பில்லில் இந்த கட்டணமும் சேர்த்து அனுப்பப்படும்'' என்றார் அவர்.
 புதியதாக வெளியிடப்படும் இந்த திரைப்படத்தை ஒரு முறை மட்டுமே கட்டணம் செலுத்தி பார்க்கமுடியும். அதே போன்று டி.டி.எச். நிறுவனங்கள் எந்த நேரத்தில் ஒளிபரப்புகிறார்களோ அந்த நேரத்தில் மட்டுமே குறிப்பிட்ட அந்த திரைப்படத்தைப் பார்க்க முடியும்.
 டி.டி.எச்.-ல் ஒளிபரப்பப்படும் புதிய திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகாது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பி இதனால் வரும் வருவாயில் டி.டி.எச். நிறுவனமும், திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்களுக்கான பங்கை எடுத்துக் கொள்வார்கள்.
 டி.டி.எச்-ல் படத்தை திரையிடுவது குறித்து கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில்,
 ""இந்த புதிய முயற்சியை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். விஞ்ஞான மாற்றத்துக்கு ஏற்ப திரையரங்குகள் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டி.டி.எச். சேவை மூலம் ஒளிபரப்பாகும் படம் நன்றாக இருந்தால் நிச்சயமாக அந்த ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பார்கள்'' என்கிறார்.
 தயாரிப்பாளர் கேயார்:
 இந்த முயற்சி தமிழன் ஒருவனுக்கு உலக சினிமா அரங்கில் நிரந்தர புகழை பெற்றுத்தரும். திரையரங்குகள் எல்லாம் வரிசையாக மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன சினிமாவில், கமலின் டி.டி.எச். முறை வந்தால், இருக்கும் தியேட்டர்களும் மூடு விழாவுக்கு செல்ல வேண்டியதுதான் என்கிறார்கள். எந்த தியேட்டர்களை மூடினார்கள். சரியாக பராமரிக்கப்படாத, கண்டுக் கொள்ளப்படாத ரசிகர்களின் தேவைகளை உணர்ந்துக் கொள்ளாத தியேட்டர்கள்தான் மூடப்பட்டு வருகின்றன. விஞ்ஞான மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தியேட்டர்களில் இன்றைக்கும் நல்ல வருவாய்தான் இருந்துக் கொண்டிருக்கிறது என்கிறார்.
 இந்நிலையில் டி.டி.எச்.லிலும், திரையரங்குகளில் ஒரே நாளில் திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், திடீரென்று முதலில் திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட்டுவிட்டு, அதன்பின்பு சில தினங்களில் டி.டி.எச்.ல் படத்தை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால் டி.டி.எச்.ல் திரைப்படம் வெளியாவது குறித்த தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் தன்னுடைய நிலையிலிருந்து பின்னடைந்துவிட்டார் என்கின்றனர் திரைத்துறையினர்.
 ஜி. அசோக்
 ஜெனி ஃப்ரீடா
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com