

என் வயது 75. சர்க்கரை வியாதி, மூட்டு வலிக்கு மாத்திரை எடுத்து வருகிறேன். காலையில் பூஜை செய்யும்போது தூக்கம் தூக்கமாக வருகிறது. முயற்சி செய்தாலும் தூக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. இதை எப்படிக் குணப்படுத்துவது?
கவி செ.பாண்டியன், பரமக்குடி.
மூளையில் வாயுவினால் ஏற்படும் வறட்சியினால் மூளக்குச் சோர்வு ஏற்படுகிறது. பூஜையின்போது ஒரு வஸ்துவின் மீது சிரத்தையைக் கொண்டு வந்து, அதற்கு ஒரு வடிவத்தை உண்டாக்கி, தியானம் செய்வதற்கு பிராண வாயுவின் சஞ்சலமற்ற ஒடுங்கிய நிலை தேவைப்படுகிறது. மூளையின் எல்லையற்ற ஆகர்ஷண சக்தி இதன் மூலம் தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட ஆகர்ஷண சக்தியை நீங்கள் மூளையில் பதிய வைத்துக் கொள்ள நினைக்கும் நேரத்தில், வாயுவின் குணங்களாகிய வறட்சியும் லேசான தன்மையும் சீற்றமடைந்து அப்பகுதியிலுள்ள நெய்ப்பும், கனமும் குறைகின்றன.
மூளையின் மிருதுவான தன்மையைப் பாதுகாக்கப் பெரிதும் உதவும் திரவ வஸ்துவில் நிறைந்துள்ள இந்த நெய்ப்பும் கனமும் குறையும் தருவாயில், அவற்றை உடனடியாக மூளை சுரக்கச் செய்கிறது. இவற்றின் ஆதிக்கம் க்ஷணப்பொழுதில் வறட்சி மற்றும் லேசான வாயுவின் குணங்களை மட்டுப்படுத்தி அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும்பொழுது, உறக்கம் தன்னை அறியாமலேயே வந்துவிடும். அதனால் வாயுவின் தூண்டுதலை அதிகப்படுத்தாமலும், கபத்தின் குணங்களை அதன் வழியே வளரவிடாமலும் ஒரு சமமான நிலையை நீங்கள் மூளைப் பகுதியில் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
மூக்கினுள் மருந்துவிடுதல், வாந்தி செய்து கபத்தை வெளியேற்றுதல், கண்களில் மையிடுதல், பட்டினியிருத்தல், கவலை, வருத்தம், பயம் கோபம் ஏற்படுத்துதல் போன்ற சிகிச்சை முறைகளால் அதிகமான தூக்கம், தேவையற்ற நேரங்களில் தூக்கம் ஏற்படுதல் போன்றவற்றை நம்மால் குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் இவை உங்கள் விஷயத்தில் பொருந்தாது என்பது விந்தையான ஒரு விஷயமாகும். காரணம் இவற்றால் மூளையிலுள்ள வழுவழுப்புத் தன்மை குறைந்துபோய், வாயு மேலும் மேலும் வலுப்பெறும் என்பதால்தான்.
வறட்சிதரும் வீர்யமுடைய மருந்தை மூக்கினுள் விடுவதால் கபம் வெளியேறி, வாயு வளர்ந்துவிடும் என்பதால் உங்களுக்கு க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தை உருக்கி, 2 -4 சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடுவதால், மூளையில் நரம்புகளின் வாட்டத்தை மட்டுப்படுத்தி கபமும் கூடாமல், வாயுவையும் சீரான வகையில் செயல்படுத்தலாம். காலை, இரவு உணவுக்கு முன் இதைச் செய்து கொள்வது நலம். மருந்தை நீராவியில் உருக்கி அதன் பிறகு விட்டுக் கொள்வதுதான் நல்லது.
தலைக்கு க்ஷீர பலா தைலம் வெதுவெதுப்பாகத் தேய்த்து 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இளநீர்க் குழம்பு எனும் கண்ணில் விட்டுக்கொள்ளும் மருந்தை 1 -2 சொட்டுகள் காலையில் பல் துலக்கிய பிறகு விட்டுக் கொள்ளவும். கபதோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய நெய்ப்பையும், கனத்தையும் கட்டுப்படுத்தும். காதில் வசாலசுணாதி எனும் ஆயுர்வேத தைல மருந்தை 5 -8 சொட்டுக்கள் காலை உணவுக்கு முன் இளஞ்சூடாக விட்டுக் கொள்வதன் மூலமாக பிராண வாயுவின் வறட்சி மற்றும் லேசான தன்மை எனும் குணங்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தலாம். அரிமேதஸ் எனும் தைலத்தை வாயினுள் காலை, இரவு உணவுக்குப் பிறகு 5 மி.லி. விட்டுக் கொப்பளித்துத் துப்பினால், மூளையிலுள்ள வாயு கபங்கள் சீற்றமடையாமல் தத்தம் தொழில்களை சரி வரச் செய்யும் வகையில் சீராக்க முடியும். ஏலாதி தைலத்தை க்ஷவரம் செய்த பிறகு, முகத்தில் இதமாகத் தடவி, சுமார் 10 - 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, பயத்தம்மாவை தண்ணீருடன் கரைத்து முகத்தில் பூசி, எண்ணெய்ப் பசையை அகற்றிவிடுவதன் மூலமாகவும் வாயு கபங்களை அடக்கி வைக்கலாம்.
விதார்யாதிக்ருதம் எனும் நெய் மருந்தை 5 - 10 மி.லி. உருக்கி, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெறுவதால் இம்மருந்தை எப்போது எப்படிச் சாப்பிட்டால் அதிக நன்மை என்ற விவரத்தை மேலும் தெரிந்து கொள்ளலாம்.
உணவில் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகியவற்றைக் குறைக்கவும். வெதுவெதுப்பாக உணவைச் சாப்பிடவும், பகல் தூக்கத்தை கோடைக் காலங்களில் மித உணவுக்கு முன் நீங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் மழை, குளிர்நாட்களில் தவிர்க்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.