

என் வயது 75. உயர் இரத்தக்கொதிப்பு, மலச்சிக்கல், முதுகு வலி ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். கடந்த ஒரு மாதமாக முதுகில் வலதுபுறத்தில் வலி ஏற்பட்டு படுக்கும்போதும், புரண்டு படுக்கும்போதும் மூச்சுவிடக் கூட முடியவில்லை. நெய், வாழைப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கான ஆயுர்வேதத் தீர்வு என்ன?
சி.பி.நடராஜன், தருமபுரி.
மலை வாழைப்பழத்தை சிறிது உருக்கிய பசு நெய்யில் தோய்த்துச் சாப்பிடுவதால் குடலுக்குத் தேவையான நெய்ப்பு கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இந்த நெய்ப்பினால் முதுகுத் தண்டுவடம் மற்றும் அதன் வில்லைப் பகுதிகள் வறண்டு விடாமல் ஒரு பாதுகாப்பும் கிடைக்கும். இதனால் இரத்தக்கொதிப்பு அதிகமாகாது. வெளிப்புறம் வலியைப் போக்கக் கூடிய ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய நாராயண தைலம், தன்வந்தர தைலம், மஹாமாஷ தைலம், பலா அஸ்வகந்தாதி தைலம், வாதமர்த்தனம் குழம்பு, வாதாசினீ தைலம், ஸஹசராதி தைலம், முறிவு எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றிரண்டை மருத்துவர் ஆலோசனைப்படி இரும்புக் கரண்டியில் வெதுவெதுப்பாக சூடாக்கி, சிறிது உப்பு கலந்து, வலியுள்ள பகுதியில் இதமாக நீவி விடுவதும், பிடித்து விடுவதும், பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதும் நல்லது. ஆமணக்கு, நொச்சி, கல்யாண முருங்கை, கற்பூரம், யூகலிப்டஸ், வாதநாராயணன், புங்கன் ஆகியவற்றின் இலைகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி இரும்பு கடாயில் சூடாக்கி எண்ணெய் தேய்த்த பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.
வயோதிகத்தால் தோல் மற்றும் உட்புற வறட்சி தங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்ற நிலையில் பாயசம் அல்லது பால்சோறு, பொங்கல் அல்லது இளஞ்சூடுள்ள எண்ணெய்ப் பசைகொண்ட புலால் முதலியவற்றால் வியர்க்கச் செய்ய வேண்டும். இதனால் உட்புற வறட்சி நீங்குவதோடு தோல், நரம்புகள், எலும்புகள், தமனிகள் மற்றும் தசை நார்கள் ஆகியவை வலுப்பெறக்கூடும். இதை நீங்கள் ஓர் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி, செய்து கொள்வது நலம்.
தேனில் ஊறிய நெல்லிக்காய் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிரண்டு நெல்லிக்காய்களை காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தக் குழாய்களுக்குத் தேவையான அளவு மிருதுவான தன்மையை அடைந்து, இரத்தத்தினுடைய அழுத்தமானது சீராகி அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இரத்தக் கொதிப்பின் உபாதையையும் குறைத்துக் கொள்ள முடியும். உட்புற நெய்ப்பைத் தரும் இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகளை சரிவிகிதமான அளவில் உணவில் சேர்ப்பதும், காரம் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை வாயுவை வளர்க்கும் துர்குணம் உள்ளவையாக இருப்பதால் அவற்றை சற்றே குறைத்து சாப்பிட்டு வருவதும் தங்களுக்கு நல்லது.
தலையில் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய க்ஷீரபலா, கார்ப்பாஸôஸ்த்யாதி, பலாகுடூச்யாதி போன்றவற்றுள் ஒன்றை வெதுவெதுப்பாக அரை அல்லது முக்கால் மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு காலையில் குளித்துவர, இந்த மருந்தினுடைய வீரியமானது, முதுகுத் தண்டுவடப்பகுதிகளில் பரவுவதால் அவற்றினுடைய அசைவானது எளிதாகி வலி நிவாரணியாகவும் உதவிடக்கூடும்.
நீங்கள் நேர் சீராக உட்காருவதும், நிற்பதும், படுப்பதும் நல்லது. குதிகால் அதிகம் உயர்ந்திருக்கக் கூடிய அல்லது தேய்ந்த காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். ஒரே நிலையில் இருந்து கொண்டு முதுகுத் தசைகளுக்கு களைப்பு வருமளவிற்குள்ள வேலையை நெடுநேரம் தொடர்ந்து செய்வதைத் தவிர்க்கவும். சாய்ந்தோ உடலைத் திருப்பியோ ஒரு பக்கத்துத் தசை நார்களுக்கு அதிகம் இழுப்பு ஏற்படும் வகையில் அமர்வதைத் தவிர்க்கவும். கனமான சாமான்களைத் தூக்க நேர்ந்தால் கோணல் மாணலின்றி நேராக இரண்டு கால்களும் சீராக அழுந்த நின்று அதன் பிறகு தூக்குவது நல்லது.
முதுகிற்கு மென்மையான ஒரு சாய்மானத்தை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்வது நல்லது. அந்தச் சாய்மானம் வளைந்து தொய்வு கொடுக்குமாறு இல்லாமல் நேராக இருத்தல் நலம். முதுகுத் தசைகள் நல்ல வலுவுடன் இருக்க தக்க தேகப் பயிற்சிகளைப் பழகிக் கொள்வதும், அவற்றைத் தொடர்ந்து செய்வதும் நல்லது. தினமும் ஓரிரு மணி நேரமாவது எந்த சாய்மானத்திலும் சாயாமல் கால்களை மடக்கி நேராக உட்காரப் பழகிக் கொள்வது தண்டுவடத்தை வலுப்படுத்தும் ஒரு நல்ல உபாயமாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.