ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொடர்ச்சியான தலைவலி நீங்க...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தொடர்ச்சியான தலைவலி நீங்க...!
Updated on
2 min read

நான் பொறியியல் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். கஹல்ற்ர்ல் உபயோகிப்பது எனக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. எனக்கு தலைவலிப் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. குறைந்தது 4 - 5 நாட்கள் தொடர்ச்சியாகத் தலைவலி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிய இயலவில்லை. கண்ணாடி மாற்றியும் பயனில்லை. இத் தலைவலியைக் குறைக்க ஆயுர்வேதம் மூலம் முடியுமா?

சிவ. வெங்கடேஷ், திருக்கோவிலூர்.

மனிதர்களுடைய தலைப்பகுதியில் தர்பகம் என்ற ஒரு கபம் இருந்து செயல் படுகிறது. இந்த கபம் தலைப்பகுதியில் உள்ள ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் பகுதிகளுக்குத் தேவையான அளவு ஊட்டத்தைத் தந்து அதன் மூலம் புலன்களின் செயல்பாடுகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த தர்பகம் என்ற கபத்தின் ஊட்டம் கெடாமல் இருக்க உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளின் சீரான சேர்க்கை அவசியம். அதனால் இந்த தர்பகம் எனும் கபம் உங்களுடைய விஷயத்தில் தன் ஊட்டத்தை இழந்து வருவதாகத் தெரிகிறது. அதற்கு முக்கிய காரணமாக அதிகமாகக் கணினியைப் பயன்படுத்துவதால் தர்பகக் கபத்தினுடைய செலவு அதிகரித்து அதனுடைய தேய்மானம் ஏற்படும் பகுதியில் நரம்புகளில் வாயுவினுடைய ஆதிக்கம் அதிகமாகிறது. அந்தத் தேய்மானத்தை ஈடு செய்யும் வகையில் உணவின் வரவும் தகுந்த ஓய்வும் கிடைக்காமல் போகும் நிலையில் நரம்பு மண்டலத்தில் வாயுவினுடைய வறட்சியினால் தலைவலி ஏற்படுகிறது.

அதனால் நீங்கள் முன் குறிப்பிட்ட மாதிரி உணவில் இனிப்பான பதார்த்தங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். புளிப்பும், உப்பும் மிதமாகச் சேர்க்கலாம். கணினியை அதிகநேரம் பார்த்து வேலை செய்ய வேண்டியிருப்பதால் கண்கள் சோர்வடைந்தவுடன் மேலும் அதற்கு வேலைப் பளுவைத் திணிக்காமல் சிறிது நேரம் ஓய்வு தரும்படி பார்த்துக் கொள்ளவும். தகுந்த ஓய்வு கண்களுக்கு கிடைத்துவிட்டால் கண்களைக் குளிர்ந்த நீரில் ஒரு முறை நனைத்து இதமாகத் துடைத்துவிட்டு அதன் பிறகு மறுபடியும் உங்களுடைய வேலைகளைத் தொடரலாம். வெயிலில் செல்ல நேரும்போது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் கண்ணாடியை அணிந்து கொள்ளவும்.

குளிர்ச்சி மற்றும் ஊட்டத்தைத் தரும் பழரசங்கள், பாசந்தி, பால்கோவா, கரும்புச்சாறு, நெய், பால், இனிப்பு லஸ்ஸி போன்றவற்றை உங்களைப் போன்ற மாணவர்கள் அதிகம் சாப்பிடவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. காரணம், இவற்றின் மூலம் மூளைப்பகுதிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தைப் பெறலாம்.  தேங்காய் எண்ணெய்யை வாரம் இருமுறையோ மூன்று முறையோ தலையில் அரை, முக்கால் மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் காலை வேளைகளில் குளித்துவந்தால் தலையைச் சார்ந்த தர்பகக் கபத்திற்கு அனுகூலமாக இருக்கும்.

தலையில் கனம், நீர்க்கோர்வை, ஜலதோஷம், மூக்கடைப்பு, தும்மல் போன்ற உபாதைகள் ஏதும் தங்களுக்கு இல்லாதிருந்தால் க்ஷீரபலா101 எனும் நெய்மருந்தை லேசாக உருக்கி மூக்கினுள் ஒவ்வொரு துவாரத்திலும் விட்டு மெதுவாக உறிஞ்சி வருவதன் மூலம் நரம்பு மண்டலத்தில் பரவியுள்ள வாயுவின் வறட்சி நீங்கி தலைவலி உபாதை குணமாகி விடும். ஆனால் மேற்குறிப்பிட்ட உபாதைகள் இருக்கும் பட்சத்தில் ராஸ்னாதி சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தை இஞ்சிச் சாறில் குழைத்து, சிறிது சூடாக்கி நெற்றியில் பற்று போட்டு சுமார் அரை மணி, ஒரு மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு அலம்பி விடுவதன் மூலமாக நீர்க்கோர்வை உபாதையுடன் கூடிய தலைவலியும் நீங்கிவிடும். கண்களில் உள்ள நீர் வற்றாதிருக்க கண்களின் உள்ளே விடும் தர்ப்பணம், ஆஸ்சோதனம், அஞ்ஜனம், புடபாகம் எனப்படும் ஆயுர்வேத சிகிச்சைமுறைகள் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி செய்துகொள்ள வேண்டிய சிறப்பான சிகிச்சைமுறைகளாகும். தசமூலரஸôயனம் எனும் ஆயுர்வேத லேஹ்யமருந்தை 1 - 2 டீஸ்பூன் (5 கிராம் முதல் 10 கிராம் வரை) இரவில் படுக்கும்முன் நக்கிச் சாப்பிட்டு வர தலைவலி நீங்குவதற்கு உபயோகமான ஒரு மருந்தாக அமையும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com