மாதவன் என்னும் பூரண யோகி!

கிருஷ்ணசாமி ஐயர் தொடங்கியதை நிர்வகிக்க அவரின் மூத்தமகன் பாலசுப்ரமணிய ஐயர் தலைமையில் குடும்ப உறுப்பினர்கள்
மாதவன் என்னும் பூரண யோகி!
Updated on
2 min read

வி. கிருஷ்ணசாமி ஐயரால் உருவான கல்வி நிலையங்களை இப்படி வரிசைப்படுத்தலாம்! சென்னை சமஸ்கிருதக் கல்லூரி, எஸ். வி.வி. பாடசாலை, சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேனிலைப்பள்ளி, ராமரத்தினம் நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி, குப்புஸ்வாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை சமஸ்கிருத அகாதெமி, லா ஜெர்னல், கலைமகள் உள்ளிட்ட பத்திரிகைத் துறையிலும் ஈடுபாடு, இந்தியன் வங்கியின் நிறுவனர் என்ற பல்வகை ஈடுபாடு. இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் இவரின் மார்பளவு சிலை இவரின் பெருமைக்குச் சான்று.

கிருஷ்ணசாமி ஐயர் தொடங்கியதை நிர்வகிக்க அவரின் மூத்தமகன் பாலசுப்ரமணிய ஐயர் தலைமையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலையாக எடுத்துக் கொண்டார்கள். மூன்றாம் தலைமுறையும் அப்படியே. இவர்களில் அற்புதமாகச் செயல்பட்டவர், அண்மையில் மறைந்த மாதவன் (பாலசுப்ரமணியனாரின் மகன்).

வேதியியலில் பட்டப்படிப்பு; 1951-இல் ரயில்வேயில் அதிகாரி. பணி நிமித்தம் செல்லாத ஊர் இல்லை. மாதவன் பல உயர் பதவிகளை ஏற்று ரயில்வேயில் சிறந்த அதிகாரியாக, இயக்குநராக, கூடுதல் பொது மேலாளராகப் பணி புரிந்தார். அறவாழ்வினை முழுமையாக ஏற்றவர். பணி காரணமாக பல ஊர்கள் சென்றபொழுது அங்கங்கே இதிகாச, புராணங்கள் பற்றி சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அசாமில் பணியாற்றியபோது அவர் நிகழ்த்திய பாகவதம் பற்றி பொழிவுகளை இன்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சலிப்பில்லாது உழைத்து 1984-இல் ஓய்வு பெற்ற பின்பும் அவரால் முடங்கிக்கிடக்க முடியவில்லை. குடும்பத்தின் நற்பணிகளை நடத்தி வந்த அவரது சிறிய தந்தையான பிரசித்திபெற்ற எழுத்தாளர், கி. சந்திரசேகரன் மறைந்தார். அவர் வழியிலே அவற்றின் நிர்வாகத்தை மாதவன் ஏற்றார். முக்கியமாக ஆறு கல்வி நிலையங்களைக் கவனிக்க வேண்டிய கட்டாயம். பண நெருக்கடிஎனப் பல இன்னல்களிடையே மாதவனது  தனிப்பட்ட நிர்வாகத் திறமையினால் அனைத்து நிலையங்களும் புதிய வாழ்வு பெற்றன.

நிதிப்பற்றாக்குறை இதில் முக்கியமானது. ஒரு சில தனவந்தர்களே மனமுவந்து, இப்படிப்பட்ட பணி செய்வோருக்கு உதவுவார்கள். மாதவனுக்கு ரயில்வேயில் நிதி இலாக்காவில் பல்வேறு  தளங்களில் உழைத்ததனால் நல்ல அனுபவம். இந்த அனுபவம் முழுமையாக இந்நிறுவனங்களுக்குக் கைகொடுத்தது.

இந்நிறுவனங்களில் சம்பளம் கொடுக்கக்கூட தட்டுப்பாடு ஏற்படும். தனது சேமிப்பிலிருந்து கொடுத்துச் சரிக்கட்ட வேண்டும். பள்ளிகளில் நிதி நிலைமை எப்படி இருந்தாலும் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டடங்கள், மாணவர் விடுதிகள், ஆசிரியர்கள் என்று எவ்வளவோ சிரமம்! அரங்கத்திலிருந்து கழிப்பறைவரை எதுவுமே மாதவனது கூரிய கண்களிலிருந்து தப்ப முடியாது. அதனால்தான் இன்று இந்த நிறுவனங்கள் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கின்றன.

மாதவன் நடத்தியுள்ள விழாக்கள் - அர்த்தமுள்ள, இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் விழாக்கள் - கணக்கற்ற ஆசாரியார்கள்-சமஸ்கிருத கல்லூரியில் வந்து தங்கி சொற்பொழிவுகள், ஹோமங்கள் என்று நடத்திட ஏற்பாடு செய்தவர். இவரது மூச்சும் பேச்சும் இந்நிறுவனங்களது சிறந்த அமைப்பு, சிதைக்க முடியாத நிதிநிலை, முன்னேற்றம் பற்றியே இருந்திருக்கிறது. இவரது அருகில் இருந்து கவனித்த மகாதேவன் எழுதுகிறார்:

""ஒருநாள்கூட அவர் கல்லூரியை வந்து பார்வையிடாது இருந்தது இல்லை. கல்லூரி மற்றும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வேலை செய்யாத நாள்களிலும்கூட அவர் வந்து கவனித்து தேவைகளை அறிந்து தம் பணிகளைச் செவ்வனே முடித்து எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணியினையும் திட்டமிட்டுச் செயல்படுவார். ஒருநாள்கூட அவர் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டது என்பது கிடையாது.''

சென்ற ஆண்டுகூட வி. கிருஷ்ணசாமி ஐயரின் 150-ஆவது பிறந்தநாளை மிக விமரிசையாகக் கொண்டாடியதை நம்மால் மறக்கவே முடியாது. அப்பொழுது மனோதைரியம் என்பது என்ன என்பதற்கு இளைய தலைமுறைக்கு மாதவன் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததை மறக்க முடியாது. கைங்கரியத்திற்காகவே அவதரித்த லக்ஷ்மணன் போன்ற மாதவன் வேதாந்த நூல்களைப் பயின்று ஆழ்ந்த ஞான யோகத்தையும், தன் தொண்டு மூலம் கர்ம யோகத்தையும் ஆசாரிய பக்தி, ராமனிடம் ஈடுபாடு மூலம் பக்தியோகத்தையும் ஒருங்கிணைத்த பூரண யோகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com