""இந்த உலகிற்கு நான் சொல்லித் தருவதற்குப் புதிதாக ஒன்றுமில்லை. சத்தியமும், அகிம்சையும் மலைகளைப் போல பழமையானவை.
புலால் உண்ணுதல் நல்லது என்று எனக்குத் தோன்றியது. புலால் உண்டால் நான் பலசாலியாகவும், தைரியசாலியாகவும் இருப்பேன் என்றும் இந்த நாடு முழுவதும் புலால் உண்டால் ஆங்கிலேயர்களை வென்று விடலாம் என்றும்கூட எனக்குத் தோன்றியதுண்டு.
(இங்கிலாந்தில்) ஒரு சைவ உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சால்ட் என்பவர் எழுதிய "சைவ உணவுக்கு வேண்டுகோள்' என்ற புத்தகத்தை வாங்கி முன் அட்டை முதல் பின் அட்டை வரை படித்தேன். அந்த நாள் முதல், சைவ உணவு நண்பனாக மாறினேன்.
ஒழுக்கமே எல்லாவற்றுக்கும் அடிப்படையானது என்பதும், எல்லா உண்மையும் ஒழுக்கத்தின் சாராம்சமே என்பதும் என்னுள் ஆழமாகப் பதிந்து விட்டன.
என்னுடைய நடைமுறை வாழ்க்கையை அடியோடு மாற்றிய புத்தகம் "ரஸ்கின்' எழுதிய `Unto this last'. என்னுடைய திடமான நம்பிக்கைகள் பல அந்த சிறந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.
இந்துக்களுக்கு நான் ஓர் ஊழியன் என்பது போலவே, முகம்மதியர், கிறித்தவர், பார்சி, யூதர் ஆகியோருக்கும் நான் ஓர் ஊழியன்தான். ஓர் ஊழியனுக்குத் தேவையானது அன்புதானே தவிர, கௌரவம் அல்ல. 40 வயதுக்குப் பிறகு நான் யாரையும் வெறுப்பதை நிறுத்திக் கொண்டேன். ஆனால், தீயவை எங்கிருந்தாலும் அவற்றை வெறுக்கிறேன்.